+

IITMRP டீப்டெக் ஸ்டார்ட்-அப் Quarkitech, அர்த்தா வெஞ்சர் ஃபண்ட் II-ன் கீழ் ரூ.2 கோடி நிதி திரட்டியது!

சென்னை, ஆகஸ்ட் 12, 2026: சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவைச் சேர்ந்த ஆழ்தொழில்நுட்ப நிறுவனமான குவார்கிடெக் (Quarkitech), ஆர்த்தா வெஞ்சர் ஃபண்ட் II-ன் கீழ் செயல்படும் ஆர்த்தா அக்சஸ் மற்றும் ஃபின்வோல்ட் ஆகிய நிறுவனங்களிடமிருந்து முன்விதை முதலீடாக ரூ.2 கோடியை திரட்டியுள்ளது. பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட

ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க்கை சேர்ந்த டீப்டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ’குவார்கிடெக்’ (Quarkitech), அர்த்தா வெஞ்சர் ஃபண்ட் II-ன் கீழ் செயல்படும் அர்த்தா ஆக்சஸ் மற்றும் ஃபின்வோல்ட் ஆகிய நிறுவனங்களிடமிருந்து முதலீடாக ரூ.2 கோடியை திரட்டியுள்ளது.

பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட அதிக அளவிலான தரவுகளை கையாள வேண்டிய துறைகளுக்கான தனது பிரத்யேக தரவு சுருக்கத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

இதனுடன், தேசிய குவாண்டம் மிஷனின் கீழ், ஐஐடி மெட்ராஸ்–சிடாட் சமக்ன்யா டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷனிடமிருந்து ரூ.1.5 கோடி மானியத்தையும் குவார்கிடெக் பெற்றுள்ளது. தேசிய குவாண்டம் மிஷன் 2023-ம் ஆண்டு மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

குவார்கிடெக்கின் தொழில்நுட்பம், ரேடார், லைடார், ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் இமேஜர்கள் உள்ளிட்ட சென்சார்கள் உருவாக்கும் தரவுகளை, அவை சேமிக்கப்படுவதற்கோ செயலாக்கப்படுவதற்கோ அனுப்பப்படுவதற்கோ முன்பாகவே அதன் மூலத்திலேயே சுருக்குகிறது. சென்சாரின் வகையைப் பொறுத்து தரவின் அளவை 10 முதல் 100 மடங்கு வரை குறைக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Quarki founders

ட்ரோன்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் பாதுகாப்புத் தளங்கள் தொடர்ந்து அதிக அளவு தரவுகளை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் நேரடி இணைப்பு இல்லாதபோது, அந்தத் தரவுகளை முழுமையாக சேமிப்பதும் அனுப்புவதும் சவாலாகிறது. இதனால் தரவின் அளவு, தரம், பரிமாற்ற வேகம் மற்றும் செலவு ஆகியவற்றில் இயக்குநர்கள் சமரசம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்தச் சிக்கலுக்கு தரவு உருவாகும் இடத்திலேயே தீர்வு காண்பதே குவார்கிடெக்கின் நோக்கமாகும். அதன் மென்பொருள் நூலகத்தை தளத்தில் ஏற்கெனவே இருக்கும் கணினி வளங்களிலேயே இயக்க முடியும். ரேடார், லைடார், ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் மற்றும் எலக்ட்ரோ-ஆப்டிக்கல் தரவுகளுக்கு தனித்தனியாக தொழில்நுட்பத்தைச் சரிசெய்து பயன்படுத்த முடியும். இதனால் ஒரே தொழில்நுட்பத்தை ஆளில்லா விமானத்தின் தரவுப் பரிமாற்ற அமைப்பு, செயற்கைக்கோள் பேலோடு அல்லது தரைக்கட்டுப்பாட்டு தரவுக் காப்பகத்திலும் பயன்படுத்த முடியும்.

சிக்கலான குவாண்டம் அமைப்புகளை மாதிரியாக்குவதற்காக உருவாக்கப்பட்ட கணிதக் கட்டமைப்புகளான டென்சர் நெட்வொர்க்குகளை பயன்படுத்தி, அதிக அளவிலான சென்சார் தரவுகளில் உள்ள தேவையற்ற மறுதகவல்களை கண்டறிந்து நீக்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

குவார்கிடெக்கின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான ஷஷிகாந்த் சிங் குன்வர் கூறுகையில்,

“சிக்கலான குவாண்டம் அமைப்புகளை மாதிரியாக்கப் பயன்படுத்தப்படும் கணிதக் கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், நவீன பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் உருவாகியுள்ள மிகப்பெரிய தரவு நெருக்கடிகளை நாங்கள் அவிழ்த்து வருகிறோம். டென்சர் நெட்வொர்க்குகளின் கோட்பாட்டு ஆற்றலை உடனடி, நிஜ உலக தந்திரோபாயப் பயனாக மாற்றுகிறோம்,” என்றார்.

அர்த்தா வெஞ்சர் ஃபண்ட் II-ன் கீழ் செயல்படும் முன்விதை முதலீட்டுத் திட்டமான அர்த்தா அக்சஸ் மூலமாக இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு நிறுவனத்திற்கு ஆதரவளித்துள்ள கல்வி நிறுவனங்களின் இன்குபேட்டர்கள் மற்றும் ஆக்சிலரேட்டர்களுடன் இணைந்து, அந்த நிறுவனங்களின் விதிமுறைகளின் அடிப்படையில் முதலீடு செய்வதே அர்த்தா அக்சஸின் நடைமுறையாகும்.

அர்த்தா குழுமத்தின் இயக்குநர் அனிருத் ஏ. தமானி கூறுகையில்,

“சென்சார்களில் உள்ள தேவையற்ற தரவு என்பது முதலில் மென்பொருள் பிரச்சினை அல்ல; அது ஒரு இயற்பியல் பிரச்சினை. தரவு ஏற்கெனவே உள்கட்டமைப்பில் சிக்கிய பிறகு அதைச் சரிசெய்வதற்குப் பதிலாக, தரவு உருவாகும் இடத்திலேயே குவார்கிடெக் அதைத் தீர்க்க முயற்சிக்கிறது. தற்போது அவர்களிடம் இருப்பது ஆய்வக முடிவு. ஆனால் வெப்பம், அதிர்வு மற்றும் நகரும் தளம் போன்ற சூழ்நிலைகளிலும் அது செயல்படுமா என்பதே உண்மையான கேள்வி. அந்தக் கேள்விக்கான பதில் தேடப்படும் காலத்திலேயே இந்த நிறுவனத்தில் முதலீட்டாளராக இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். அதற்காகவே அர்த்தா அக்சஸ் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

ஆய்வகச் சோதனைகளில், ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட படங்களில் தரவின் அளவை 26 மடங்கு குறைத்தபோதும், பணிக்குத் தேவையான முக்கியத் தகவல்களில் 98 சதவீதத்தைப் பாதுகாத்ததாக குவார்கிடெக் தெரிவித்துள்ளது. நகரும் தளங்கள், அதிக வெப்பம், அதிர்வு, குறைந்த மின்சக்தி மற்றும் இடையிடையே மட்டுமே கிடைக்கும் தகவல் தொடர்பு போன்ற நிஜ உலகச் சூழ்நிலைகளிலும் இந்த முடிவுகளை உறுதிப்படுத்தும் பணியில் நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது.

ஆளில்லா விமானங்கள் மற்றும் கண்காணிப்பு தளங்கள், செயற்கைக்கோள் பூமி கண்காணிப்பு பேலோடுகள், ரேடார் மற்றும் லைடார் மேப்பிங் அமைப்புகள், அத்துடன் பெறப்படும் தரவுகளை சேமித்து செயலாக்கும் தரைக்கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவை குவார்கிடெக்கின் முக்கிய இலக்கு சந்தைகளாக உள்ளன. இதே தரவு சுருக்க அணுகுமுறையை தகவல் தொடர்பு மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் உள்ள பிற குறைந்த பேண்ட்விட்த் சூழல்களிலும் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

ஃபின்வோல்டின் இணை நிறுவனர் ஆஷிஷ் பாட்டியா கூறுகையில்,

“கிளாசிக்கல் கம்ப்யூட்டிங் மிகச் சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் தற்போது அது செலவு, ஆற்றல் மற்றும் தாமதம் ஆகியவற்றில் கடுமையான வரம்புகளை எதிர்கொள்கிறது. இந்தியா தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் அந்த வரம்புகளின் அருகிலேயே உள்ளன. இன்றைய ஹார்ட்வேரிலேயே செயல்படக்கூடிய குவாண்டம்-ஈர்க்கப்பட்ட அல்காரிதங்களை குவார்கிடெக் உருவாக்குகிறது. பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் உள்ள தரவு நெருக்கடியில் தொடங்கி, தகவல் தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பில் உள்ள பல்வேறு மேம்படுத்தல் பிரச்சினைகளுக்கும் இதை விரிவுபடுத்துகிறது. ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவிலிருந்து உருவான இந்த அணிக்கு முன்விதை கட்டத்திலேயே ஆதரவளிப்பது என்பது, கடுமையான ஆராய்ச்சி உண்மையான அமைப்புகளில் செயல்படுமா என்பதைப் பார்க்கும் ஒரு முதலீடு. அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் திறன் கொண்ட குழு இது,” என்றார்.

அடுத்த கட்டமாக, ஆய்வகத்தைத் தாண்டி நேரடி பாதுகாப்பு மற்றும் விண்வெளித் தளங்களில், நிஜ உலகச் சூழ்நிலைகளில் தொழில்நுட்பத்தின் செயல்திறனை நிரூபிப்பதே குவார்கிடெக்கின் இலக்காக உள்ளது. வரும் ஓராண்டில் தள உற்பத்தியாளர்கள், இயக்குநர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் குறைந்த எண்ணிக்கையிலான முன்னோடி ஒருங்கிணைப்புத் திட்டங்களை மேற்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குவார்கிடெக், அதிக மதிப்புள்ள சென்சார் தரவுகளுக்கான மேம்பட்ட தரவு சுருக்க அல்காரிதங்களை உருவாக்கி வருகிறது. குவாண்டம்-ஈர்க்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி சிக்கலான சென்சார் தரவுகளில் மறைந்துள்ள தேவையற்ற தகவல்களை கண்டறிந்து நீக்குவதன் மூலம் 10 முதல் 100 மடங்கு வரை தரவைச் சுருக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு மற்றும் அறிவியல் பயன்பாடுகளுக்குத் தேவையான முக்கியத் தகவல்களைப் பாதுகாத்தபடி, தற்போதுள்ள பேண்ட்விட்த் மற்றும் மின்சக்தி வரம்புகளுக்குள் அதிக தரவை அனுப்பவும், சேமிக்கவும், செயலாக்கவும் உதவுகிறது.

அர்த்தா அக்சஸ் என்பது ஆர்த்தா வெஞ்சர் ஃபண்ட் II-ன் கீழ் செயல்படும் கட்டமைக்கப்பட்ட pre seed இணை முதலீட்டுத் திட்டமாகும். ஐஐடி டெல்லி, ஐஐடி பாம்பே, ஐஐடி மெட்ராஸ், ஐஐடி கான்பூர், ஐஐஎம் பெங்களூருவின் NSRCEL மற்றும் டி-ஹப் உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களின் இன்குபேட்டர்கள் மற்றும் ஆக்சிலரேட்டர்களுடன் இணைந்து ஆரம்ப கட்டத்தில் உள்ள உயர்தர ஸ்டார்ட்அப்களை இந்தத் திட்டம் அடையாளம் காண்கிறது.

ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சமாக ₹1 கோடி வரை முதலீடு செய்யும் இந்தத் திட்டத்தின் மொத்த ஒதுக்கீடு ரூ.25 கோடியாகும்; அதிகபட்சம் 50 நிறுவனங்களில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2021 முதல் 2024 வரையிலான காலத்தில் ஆர்த்தா வெஞ்சர் ஃபண்ட் I மேற்கொண்ட முன்விதை முதலீடுகளின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஃபின்வோல்ட் என்பது முன்விதை முதல் முன்பொதுப்பங்கு வெளியீடு வரையிலான பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் உள்ள ஸ்டார்ட்அப்’களுக்கு ஆதரவளிக்கும் பல்துறை வெஞ்சர் கேபிடல் நிதியாகும். வளர்ச்சி மற்றும் பிந்தைய கட்ட முதலீடுகளை மையமாகக் கொண்டுள்ள இந்த நிதி, நிறுவனர்கள் தங்கள் நிறுவனங்களை நிலையான முறையில் வளர்த்து, நீண்டகால மதிப்பை உருவாக்குவதற்கு வளர்ச்சி மூலதனம், உத்தி ரீதியான வழிகாட்டுதல் மற்றும் நீண்டகால ஆதரவை வழங்கி வருகிறது.

facebook twitter