நம்ம யாத்ரி (Namma Yatri) நிறுவனம் Pre-Series A முதலீட்டு சுற்றில் ரூ.39.8 கோடி நிதியை திரட்ட இருக்கிறது. இந்த முதலீட்டு சுற்றை JusPay நிறுவனர், சிஇஒ விமல் குமார் தலைமையிலான முதலீடு வழிநடத்துகிறது. ஏற்கனவே முதலீடு செய்துள்ள Blume Ventures மற்றும் Antler நிறுவனங்களும் இதில் பங்கேற்கின்றன. இந்த விவரம் Registrar of Companies (RoC) பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் இயக்குநர் குழு ரூ.10 முகவிலை கொண்ட 1,25,93,307 Pre-Series A1 Compulsorily Convertible Preference Shares-ஐ ஒவ்வொன்றுக்கும் ரூ.21.57 பிரீமியத்துடன் தனியார் இடமாற்ற முறையில் வெளியிட அனுமதி வழங்கியுள்ளது.
இந்த புதிய நிதியை நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த, வளர்ச்சியை அதிகரிக்க, வேலை மூலதன தேவைகளை பூர்த்தி செய்ய மற்றும் பிற பொது கார்ப்பரேட் தேவைகளுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த பங்கு ஒதுக்கீட்டுக்குப் பிறகு, விமல் குமார் நிறுவனத்தில் 13.91% பங்குகளை வைத்திருப்பார். அதே நேரத்தில், ப்ளூம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பங்கு சுமார் 10% ஆக இருக்கும்.
2024 ஆம் ஆண்டு Juspay நிறுவனத்திலிருந்து பிரிந்து Moving Tech Innovations Ltd கீழ் தனி நிறுவனமாக Namma Yatri உருவாக்கப்பட்டது. இருப்பினும், Juspay நிறுவனம் இன்னும் பெரும்பான்மை பங்குதாரராக இருந்து, அதன் கட்டண தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகிறது. சமீபத்திய பதிவுகளின்படி, Juspay சுமார் 32% பங்குகளை வைத்துள்ளது.
மகிழன் செல்வன் தலைமையிலான ’நம்ம யாத்ரி’ இந்திய வாகன சவாரித் துறையில் Uber India மற்றும் Rapido போன்ற நிறுவனங்களுடன் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளது.
ONDC தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள Namma Yatri, அரசு அமைப்புகளுடன் இணைந்து அனைத்து போக்குவரத்து முறைகளையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் செயலிகளை அறிமுகப்படுத்தும் முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிறுவனம் கடைசியாக 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆரம்பகட்ட முதலீட்டு சுற்றில் சுமார் 11 மில்லியன் டாலர் நிதியை திரட்டியது. அந்த முதலீட்டு சுற்றிலும் Blume Ventures, Antler மற்றும் Google ஆகியவை பங்கேற்றிருந்தன.