ஏப்ரல் 20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு: அரசின் புதிய கட்டுப்பாடுகள் என்ன?

09:15 PM Apr 18, 2021 |

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகரித்து வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 30.4.2021 நள்ளிரவு வரை கடைபிடிப்பதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.


எனினும், அடுத்த சில வாரங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் இருப்பதனால் அரசின் நிபுணர்கள் குழு தொடர்ந்து நடத்திய ஆலோசனைகளின் முடிவாக மறு உத்தரவு வரும் வரை ஏப்ரல் 20 அதிகாலை முதல் கடைபிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இரவு நேர ஊரடங்கு

  • மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது தனியார்/பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.


  • வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் மேற்கூறிய காலகட்டங்களில் இரவு 10 மணி முதல் 4 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது.


  • மாநிலங்களுக்கு இடையேயான பொது/தனியார் பேருந்து சேவைகளின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதித்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.


  • அவசர மருத்துவத் தேவைகளுக்கும் விமான நிலையம்/இரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்படும்.


  • ஊடகத்துறையினர் இரவு நேர ஊரடங்கில் செயல்படலாம்.


  • பெட்ரோல்/டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி.


  • தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். இங்கு இரவு நேரப் பணிபுரிபவர்கள், காவலர்கள் அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின் வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வர அனுமதிக்கப்படுவார்கள்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு

  • ஞாயிற்றக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என எதுவும் செயல்பட அனுமதிக்கப்படாது. இதனை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.


  • பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் முழு ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்படும்.


  • முழு ஊரடங்கு நாட்களில் உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். Swiggy, Zomato உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த நேரங்களில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். மின் வணிக நிறுவனங்களின் சேவைக்கு முழு ஊரடங்கின் போது அனுமதி இல்லை.


  • தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.


  • முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் திருமணம்/திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமலும் கட்டுப்பாடுகளுடன் நடத்தவும் பங்கேற்கவும் எந்த விதமான தடையுமில்லை.

பொது கட்டுப்பாடுகள்

  • கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தளங்களுக்கு உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.


  • தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.


  • பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.


  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய (Work from Home) அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


  • தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், வணிக வளாகங்கள், 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.


  • மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்ரல் 10 முதல் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் ஏற்கனவே குடமுழக்கு/திருவிழா நடத்த சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்/ இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ கோயில் பணியாளர்கள், நிர்வாகத்தினருடன் பொதுமக்கள் 50 பேரக்கு மிகாமல் குடமுழக்கு நடத்த அனுதிக்கப்படும்.


  • புதிய குடமுழக்கு/திருவிழாக்கள் நடத்த தற்போதைய சூழலில் அனுமதி கிடையாது.


  • +2 பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது, எனினும் ஏற்கனவே திட்டமிட்டபடி செயல்முறைத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும்.


  • கல்லூரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக வகுப்புகளை எடுக்க வேண்டும்.


  • அரசு மற்றும் தனியார் கல்லூரி/பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக நடக்க வேண்டும்.


  • கோடை கால முகாம்கள் நடத்த தடை.


  • தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் இணைந்து கோவிட் பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. சுகாதாரத்துறை ஆய்வு செய்த, தேவைப்படும் அனுமதியை வழங்கலாம். இந்த தங்கும் விடுதிகளில் பிற வாடிக்கையாளர்களை தங்க வைக்கக் கூடாது.


  • திருமண மண்டபங்கள், திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தொடர்புடைய உரிமையாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றுவதை கண்காணிக்க மாவட்டந்தோறும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.