சென்னை WayCool இணை நிறுவனர் சஞ்சய் தாசரி நிறுவனத்திலிருந்து வெளியேறினார்!

02:49 PM Dec 13, 2024 | muthu kumar

வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் சஞ்சய் தாசரி பத்தாண்டு கால ஓயா பணிக்குப் பிறகு நிறுவனத்திலிருந்து வெளியேறுவதாக லின்க்டு இன் இடுகையில் தெரிவித்தார்.

அவர் தன் இடுகையில் கூறும்போது,

“தொழில்ரீதியாக, நான் இன்னும் WayCool உடன் ஆலோசகராக இருப்பேன். நிறுவனத்தின் வணிக உத்தி ரீதியான திட்டங்கள் மற்றும் நிதி திரட்டும் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பேன், ஆனால் நான் ஆரம்பித்த இந்த நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளிலிருந்து விலகுகிறேன்,” என்று கூறியுள்ளார்.

கார்த்திக் ஜெயராமனுடன் இணைந்து நிறுவனத்தை நிறுவிய தாசரி, இப்போது சான் பிரான்சிஸ்கோவிற்குச் சென்று பிற வாய்ப்புகளைத் தொடரவுள்ளார். கிராண்ட் அனிகட்டில் இருந்து வேகூல் ரூ.100 கோடி கடன் நிதியை திரட்டிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நடப்பு மூலதனத்தை நிர்வகிப்பதற்கான அதன் தற்போதைய கடன்களை மறுநிதியளிப்பதற்கான முயற்சியின் போது இவர் விலகியுள்ளார்.

முன்னதாக அக்டோபரில், நிறுவனத்தின் வாரியம் 100 கோடி ரூபாய் திரட்ட, தலா ரூ.10 லட்சம் வெளியீட்டு விலையில் 1,000 தொடர் B6 கடன் பத்திரங்கள் மூலம் மூலதன முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்தது. கடன் பத்திரங்கள் 18 மாதங்கள் முதிர்வு காலத்துடன், ஆண்டுக்கு 18% வட்டி விகிதம் கொண்டது குறிப்பிடத்தக்கது.

சென்னையை தளமாகக் கொண்ட WayCool நிதிப்பற்றாக்குரை மற்றும் நிதி திரட்டுவதில் சிரமம் ஆகிய இடையூறுகளால் போராடி வருகிறது. இதனையடுத்து, பல பேரை பணி நீக்கமும் செய்துள்ளது. ஊடகச் செய்திகளின் படி, நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தையும் ஒத்திவைத்துள்ளது மற்றும் விற்பனையாளர்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பங்குதாரர்களுக்கான கட்டணங்களை செலுத்துவதிலும் பின் தங்கியிருந்தது.

LinkedIn-ல் சஞ்சய் தாசரியின் பதிவில்,

“நாங்கள் மளிகை உணவு லாரிகளின் சங்கிலி வர்த்தகத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டோம், நாங்கள் 6 மாத காலத்தில் இருந்தபோது ஏற்பட்ட வெள்ளம், பிறகு ஓராண்டு கழித்து ஏற்பட்ட புயல், கொரோனா தொற்றுநோய் போன்ற புறச்சூழல்கள் எங்கள் வருவாய்த் தளத்தில் 95% ஐ ஒரே இரவில் அழித்துவிட்டது," என்று பதிவிட்டுள்ளார்.