ஏஐ முதன்மை நிறுவனங்களை ஊக்குவிக்கும் 'BoomiAI' மேடையை அறிமுக செய்தது SaasBoomi

04:30 PM Mar 26, 2025 | YS TEAM TAMIL

மென்பொருளை ஒரு சேவையாக வழங்கும் சாஸ் நிறுவன நிறுவனர்கள் மற்றும் இதர மென்பொருள் டெலவப்பர்களின் அமைப்பான 'சாஸ்பூமி' (SaasBoomi), ஏஐ முதன்மை நிறுவனங்கள் உருவாக்க உதவும் 'பூமிஏஐ' (BoomiAI) எனும் பிரிவை அறிமுகம் செய்துள்ளது.

“பணி முதல் விளையாட்டு வரை ஏஐ நம்முடைய ஒவ்வொரு துறையின் விதிகளை மாற்றி எழுதி வருகிறது. நாம் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது. நாம், துணிவாக, திட்டமிட்டு, தீர்மானமாக எதிர்காலத்திற்குள் நுழைகிறோம். எனவே தான், ஏஐ முதன்மை நிறுவனங்களுக்கான புதிய இல்லம் 'பூமிஏஐ'-யை துவக்குகிறோம். இதில் ஏஐ மற்றும் சாஸ் அடுத்த பத்தாண்டுகளை வடிவமைக்க இரண்டற கலந்திருக்கும்,” என சாஸ்பூமி சி.இ.ஓ மற்றும் நிறுவன தன்னார்வளர் அவினாஷ் ராகவா கூறினார்.

இந்த முயற்சி சாஸ்பூமியின் மறு பிராண்டிங் எனக் கூறப்பட்டாலும், யுவர்ஸ்டோரியிடம் பேசியவர்கள், ஏற்கனவே உள்ள சாஸ் சமூகத்தின் மீது உருவாக்கப்படும் மற்றும் விரிவாக்கமாக பூமி ஏஐ அமையும் என தெரிவித்தனர்.

“பூமிஏஐ நிச்சயம் சாஸ்பூமியை பதிலீடு செய்யவில்லை. இது பரவலான குடையின் கீழ் வரும் புதிய முயற்சி. எங்கள் சமூகத்தை விரிவாக்கும் முயற்சி இது. சாஸ்பூமி எங்கும் போகவில்லை. அது எங்கள் அடிப்படை, எங்கள் மரபணு,” என்றனர்.

ஆனால், எங்கள் நோக்கம் பரிணாம வளர்ச்சி அடைகிறது. சாஸை மையமாகக் கொண்டு செழித்த சமூகம், ஏஐ வாக்குறுதியை நிறைவேற்றும் நிறுவனர்களை உள்ளடக்கி விரிவடையும் என ராகவா கூறினார். இந்த மேடை வளங்கள் மற்றும் கற்றலை பகிரும் மேடையாக இருக்கும். நிறுவனர்களுக்கு வலைப்பின்னல் வாய்ப்புகளையும் வழங்கும்.

சாஸ்பூமி தனது ஆண்டு அறிக்கையில், ஏஐ நுட்பத்தின் உந்துசக்தியால் இந்திய மென்பொருள் சந்தை 2035ல் 100 பில்லியன் டாலர் மதிப்பை அடையும், என தெரிவிக்கிறது.

ஆங்கிலத்தில்: புவனா காமத், தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan