ஹார்வர்டு கற்றலை மதுரைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ‘பியானோ மனிதர்’ அனில் ஸ்ரீனிவாசன்!

07:18 PM Feb 25, 2026 | YS TEAM TAMIL

தீவிரமான மருத்துவ நெருக்கடிக்கு உள்ளான போது, அனில் ஸ்ரீனிவாசன் தனது அடுத்த ஸ்டார்ட் அப்பிற்கான எண்ணத்தை பெற்றார். 2021ல் பெருந்தொற்று தீவிரமாக இருந்த காலம். ஆனால், சென்னையைச் சேர்ந்த இசைக்கலைஞர் மற்றும் கல்வியாளரான அனில் ஸ்ரீனிவாசன், கோவிட் தொற்றால் பாதிக்கப்படவில்லை. அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டிருந்தது என்பது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களால் கூட கண்டுபிடிக்கப்பட முடியாமல் இருந்தது.

அவரது உடல் நிலையை பார்த்து குழம்பிய மருத்துவர்கள், அவர் பிழைப்பதற்கான சாத்தியம்கூட இல்லை, என நினைத்தனர். இதை அவர் முன்னிலையிலேயே வெளிப்படையாக தெரிவித்து, இவருக்கு சிகிச்சை அளிப்பதைவிட கோவிட் நோயாளி ஒருவருக்கு அந்த இடத்தை அளிக்கலாமே என்று விவாதித்தனர்.

இந்த நெருக்கடிகான நாட்களில் ஸ்ரீனிவாசன், முக்கியமான ஒன்றை கவனித்தார். மேல்நாட்டில் படித்து பட்டம் பெற்ற மருத்துவர்கள் தான் குறைவான பரிவு கொண்டவர்களாக இருந்தனர். இந்தியாவில் படித்த மற்றும் அவருக்கு நண்பர்களாக இருந்தவர்கள் அதிக கருணையை காட்டினர். இது புகழ் பெற்ற கல்லூரிகளில் படிப்பது என்றால் என்ன என அவரை யோசிக்க வைத்தது.

மருத்துவமனையில் படுத்தபடி, வலியை மறக்க நினைத்தவர், ஒரு சிலருக்கு சிறந்த ஆசிரியர்களிடம் பயிலும் வாய்ப்பு கிடைப்பது மற்றும் வேறு பலருக்கு அது கிடைக்காதது ஏன் என யோசித்தார்.

“நான் கல்வியாளர் என்பதால் உலகம் முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள், பேராசிரியர்களைத் தெரியும். அவர்களை மாணவர்களுடன் இணைப்பது எப்படி என யோசித்தேன். ஹார்வர்டு மற்றும் ஸ்டான்போர்டு பேராசிரியர்கள் கொண்டு ஸ்ரீகுளம் அல்லது மதுரையில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு பற்றி யோசித்தேன்,” என்கிறார் அனில்.

இந்த நெருக்கடியில் இருந்து தப்பி உயிர் பிழைத்தவர், 2022ல் ‘க்ரு’ (Kruu) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை துவக்கினார். இந்த வடமொழி சொல்லுக்கு, ’செயல்படுவது’ ('to do') என்று பொருள்.

இந்திய கல்வியில் உள்ள பிரச்சனைகளுக்கான தீர்வாக இது அமையும், என நினைத்தார். இந்திய கல்வி முறை அதிகம் கவனிப்பதையும், குறைவாக செயல்படுவதையும் கொண்டிருப்பதாக உணர்ந்தார்.

இந்த மேடையில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் வரை, பேராசிரியர் உரைகளை கேட்கலாம். அதன் பிறகு, அவர்கள் வாரக் கணக்கில் பிராஜெக்டில் ஈடுபடுவார்கள். இதற்கு ஆக்ஸ்போர்டு, ஐஐடி மெட்ராஸ், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் வழிகாட்டுவார்கள். அவர்கள் செயலிகளை வடிவமைப்பார்கள், முன்னோட்டத்தை உருவாக்குவார்கள், தரவுகளை அலசுவார்கள். ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்களாக அல்லாமல், உடன் கற்பவர்களாக இருந்து வழிகாட்டுவார்கள்.

இந்த மேடை மூலம், திண்டுக்கல்லைச்சேர்ந்த பள்ளி மாணவர்கள் தொலைநோக்கு தரவுகளை தொலைதூர கேலக்சிகளின் வரைபடமாக மாற்றுகின்றனர். 13,000 கிமீ தொலைவில் கலிபோர்னியா பல்கலையில் உள்ள வழிகாட்டி அவர்களுக்கு உதவுகிறார். இதேபோல, தான்சானியா, கத்தார், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் மாணவர்கள் Syracuse பல்கலை பேராசிரியர் வழிகாட்டுதலில் ஊடக சார்பு குறித்து ஆய்வு செய்கின்றனர். மற்ற மாணவர்கள், ஐஐடி மெட்ராஸ் வழிகாட்டி உதவியுடன் நீடித்த தன்மை குறித்து ஆய்வு செய்கின்றனர்.

“கல்விக்கான அணுகல் வசதி இப்படி தான் இருக்க வேண்டும். உரைகள் மற்றும் போட்டித்தேர்வுகளாக அல்லாமல் நீடித்த கல்வி செயல்பாடால் அமைய வேண்டும்,” என்கிறார் ஸ்ரீனிவாசன்.


தற்செயல் கல்வியாளர்

பலருக்கும் அனில் ஸ்ரீனிவாசனை இசைக்கலைஞராகவே தெரியும். அவர் பியானோ இசைக்கருவி கொண்டு கர்நாடக சங்கீதத்தை இசைப்பதற்காக அறியப்படுகிறார். ஆனால், இசைத்துறைக்கு தற்செயலாக வந்த கல்வியாளராகவே தன்னை அவர் கருதுகிறார்.

அவருடைய முதல் நிறுவனம் ‘ரேப்சோடி’ (Rhapsody) பள்ளிகளுடன் இணைந்து, ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு இசை மூலம் கணிதம், அறிவியல் கற்றுக்கொடுக்க முயன்றது. Kruu இதை அடிப்படையாகக் கொண்டு இன்னும் உயரமான இலக்கு கொண்டுள்ளது. கொலம்பியா பல்கலை ஆய்வு மாணவர் அனுபவம் மற்றும் தற்போதைய கிரியா பல்கலை பேராசிரியர் அனுபவம் இதற்கு உதவுகிறது.

நிறுவனம் துவங்குவதற்கு முன், அனில் ஸ்ரீனிவாசன், ஆன்லைன் பாடத்திட்டங்கள் எப்படி இயங்குகின்றன, என தெரிந்து கொண்டார். வகுப்புகளை முயன்று பார்த்த பின், வீடியோ உரைகள் மட்டும் போதாது, மாணவர்களுக்கு நேரடி பிராஜெக்ட்கள் தேவை என உணர்ந்தார்.

“சோதனை முறையிலான கற்றல் மாணவர்களுக்கு அவசியம். அவர்கள் செய்து பார்ப்பதற்கான விஷயங்களை அளிக்க வேண்டும். Kruu உலகின் சிறந்த பேராசிரியர்கள் கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது. வகுப்புகள் எடுப்பதன் வாயிலாக அல்லாமல், அவர்களை செயல்பட வைப்பதன் மூலம் இதை செய்கிறது,” என்கிறார்.

இந்த மேடை, முழுவதும் வடிவமைப்பு சிந்தனை அடிப்படையில் அமைந்துள்ளது. மாணவர்கள், ஆய்வு, கருத்தாக்கம், முன்னோட்ட வடிவம் மற்றும் சோதனை ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். தரவுகளை அலசி, கலைப்படைப்புகளை உருவாக்கி, தங்கள் தேர்வுகளுக்கு விளக்கம் அளித்து, கண்டறிந்தவற்றை தெரிவிக்கும் வகையில் இயங்குகின்றனர்.

பயிற்சி பெற்ற வழிகாட்டிகள் நிகழ்நேரத்தில் வழிகாட்டுகின்றனர். ஐஐடி மெட்ராசின் அஸ்வின் மகாலிங்கம், இண்டெலெக்ட் டிசைன் ஆரினா அருண் ஜெயின், கலிபோர்னியா பல்கலை விஷ் கிருஷ்ணன், சிங்கப்பூர் பல்கலை பேராசிரியர்கள், அசோகா பல்கலை பேராசிரியர்கள் வல்லுனர் குழுவில் உள்ளனர்.

தரவுகள் மூலம் ஸ்மார்ட் ஹோம்களை இயக்குவது, வீட்டு பொருட்கள் கொண்டு காற்று சுத்திகரிப்பான்கள், நீடித்த வடிவமைப்பு, மக்களை குடிமை நாயகர்களாக்குவது உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

“இந்த மாதிரி சமநிலை கொண்டது. ஏனெனில், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஆற்றல் எல்லா மாணவர்களுக்கும் உள்ளது. நீங்கள் நுண் கற்றலுக்கு உள்ளாக வேண்டாம். பிரத்யேக தன்மை வேண்டாம்,” என்கிறார்.

எதிர்பாராத அமைப்புகள்

இந்த மேடைக்கான பலன்கள் எதிர்பாராத வகையில் அமைந்துள்ளன. மாணவர்களை விட மாணவிகள் வேகமாக திட்டங்களை முடிக்கின்றனர். மூன்றாம், நான்காம் அடுக்கு நகரங்களில் உள்ளவர்கள் மெட்ரோ நகர மாணவர்களை மிஞ்சுகின்றனர். சராசரி பள்ளிகளில் இருந்து சிறந்த செயல்பாடு வருகிறது.

“மாணவர்கள் பொதுவாக 60சதவீதத்தில் விலகி விடும் தன்மை கொண்டுள்ளனர், என்று கூறும் ஸ்ரீனிவாசன், இரண்டாவதாக, மூன்றாம் மற்றும் நான்காம் அடுக்கு நகரங்களில் உள்ளவர்கள் கற்றலுக்கான தாகம் அதிகம் கொண்டுள்ளனர். அவர்களை அதை மிகத்தீவிரமாக எடுத்துக்கொள்வதோடு கவனச்சிதறல்களும் குறைவாக உள்ளன. மூன்றாவதாக எங்கள் பயிற்சியில் சிறந்து விளங்குபவர்கள் சராசரி சிபிஎஸ்.இ பள்ளிகளில் படித்தவர்கள், வேறு பெரிய பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல,” என்கிறார்.

பதின் பருவத்தில் தான் இத்தகைய முயற்சிகள் தேவை என்கிறார்.

“உங்கள் வாழ்க்கை திசை எப்படி இருக்கும், என தீர்மானிக்கக் கூடிய பதின்பருவத்தில் தான் இத்தகைய பயிற்சி தேவை,” என்கிறார். நீங்களே பிராஜெக்ட் செய்வதன் மூலம் உங்கள் எதிர்கால விருப்பத்தை தெரிந்து கொள்ளலாம்,” என்கிறார்.

பொறியியல் என்றால் என்ன எனத்தெரியாமல் அல்லது அதற்கு தேவையான திறன் தங்களுக்கு உள்ளதா என்று தெரியாமல் லட்சக்கணக்கானோர் பொறியியல் படிக்கும் நாட்டில் இது மிகவும் முக்கியமான பாடமாகும்.

எதிர்கால திட்டம்

இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளில் 450க்கும் மேலான பள்ளிகளை Kruu சென்றடைந்துள்ளது. இவற்றில் 420 இந்தியாவில் உள்ளன. 4.5 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். பள்ளிகள் கட்டணம் செலுத்துகின்றன. பெற்றோர் நேரடியாக ஆண்டுக்கு ரூ.3,500 செலுத்தலாம்.

பள்ளிகள் தவிர, உலக பல்கலைக்கழகங்களுடனும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. பாஸ்டனைச் சேர்ந்த எக்சலரேட் உடனான ஒப்பந்தம் மூலம் மாணவர்கள் செயிண்ட் லூயிஸ் பல்கலையின் சோதனை முறையிலான கற்றல் சூழலை அணுகலாம். மெய்நிகர் பயிற்சியாளர், திறன் வகுப்புகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இல்லினாய்ஸ் தொழில்நுட்ப பல்கலை கூட்டு, கே2 மெய்நிகர் இன்குபேஷன் ஆய்வுகூடத்தை உருவாக்கியுள்ளது.

இதில் மாணவர்கள், அறிவியல், தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் சமூகம் சார்ந்த சவால்களை பேராசிரியர்கள் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளலாம். மேலும் பல சர்வதேச பல்கலைகளுடன் பேச்சு நடைபெற்று வருகிறது.

அனில் ஸ்ரீனிவாசன் உயர் கல்வியிலும் கவனம் செலுத்துகிறார். காலேஜ் இன் தி கிளவுட், பல்கலை வகுப்புகளில்ல் பிராஜெட்க் சார்ந்த கற்றலை உள்ளீடு செய்கிறது. இதில், சர்வதேச பேராசிரியர்கள் வழிகாட்டுதல் வழங்குகின்றனர். சான்றிதழ் மற்றும், பயிற்சி வேலை, ஆய்வு, ஸ்டார்ட் அப் இன்குபேஷன் வாய்ப்புகளை பெறலாம். அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், வடிவமைப்பு, தொழில்முனைவு, சமூக அறிவியல் உள்ளிட்ட பிரிவு மாணவர்கள் அணுகலாம்.

பல்வேறு காரணிகளில் ஸ்டார்ட் அப் ஐடியாக்களை அலசும் ஏஐ சார்ந்த InvestEd சேவையையும் உருவாக்கி வருகிறது.

படைப்பூக்க முக்கியத்துவம்

தொடர் தொழில்முனைவோரும், Syracuse பல்கலையின் டிஜிட்டல் ஊடக தொழில்முனைவு மைய இயக்குனருமான சீன் பிரானகன் அண்மையில் சென்னையில் தொழில்முனைவு மாஸ்டர் கிளாஸ் வழங்க சென்னை வந்திருந்தார்.

இளம் நிறுவனர்களுக்கான அவரது அறிவுரை நேரடியாக அமைந்தது: உங்களிடம் இல்லாததை கொண்டு அல்ல, இருப்பதைகொண்டு துவங்குங்கள். நீங்கள் சிறப்பாக இல்லாதவற்றில் சிறந்து விளங்க முயற்சிக்க வேண்டாம். உங்கள் வழிகளுக்கு உட்பட்டு துவங்கவும். பெரிய ரிஸ்க் வேண்டாம், சிறிய ரிஸ்கை மேற்கொள்ளுங்கள். உங்கள் கதை அல்லது ஐடியாவை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள், அதை வேறு வேறு விதமாக சொல்லுங்கள்.

ஐடியாவை இணைந்து உருவாக்குங்கள். வாய்ப்புக்காக காத்திருந்து, செயலில் இறங்குவதற்கு பதில் முதலில் செயலில் இறங்குங்கள், செயல் வாய்ப்புகளை உருவாக்கும். இந்த வகை பாடங்கள் மாணவர்கள் மனதில், அவர்கள் இந்த மேடையில் பயிற்சி பெற்ற பிறகும் நீண்ட காலம் நிலைத்திருக்கும், என ஸ்ரீனிவாசன் நம்புகிறார். எந்த கேள்விக்கும் ஏஐ விடை அளிக்கக் கூடிய உலகில் படைப்பூக்கம் மற்றும் விமர்சன சிந்தனையே முக்கியம், என்கிறார்.

இசை மூலம் மாணவர்களுக்கு கற்றுத்தந்த நாட்கள் துவங்கி அவர் இந்த நம்பிக்கையை தான் கொண்டுள்ளார்: மாணவர்கள் காண்பதை விட்டு செய்யும் போது தான் உண்மையான கற்றல் நிகழ்கிறது. மரணத்தை எதிர்கொண்ட சோதனைக்கு பிறகு இந்த எண்ணத்தை அவர் ஒரு நிறுவனமாக உருவாக்கியிருக்கிறார்.

ஆங்கிலத்தில்: ஜர்ஷத், ஸ்வேதா கண்ணன், தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan