
இன்று நடைபெற்ற மத்திய பட்ஜெட் 2026-ல், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் தன்னைத்தானே தாக்கும் (ஆட்டோ-இம்யூன்) நோய்கள் போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் உயிர் மருந்துத் (Biopharmaceutical) துறையை வலுப்படுத்த ‘பயோபார்மா சக்தி’ (Biopharma Shakti) என்ற புதிய ₹10,000 கோடி மதிப்பிலான திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
“அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ₹10,000 கோடி நிதியுடன் ‘பயோபார்மா சக்தி’ திட்டத்தை முன்வைக்கிறேன்,” என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உயிர் மருந்துகள் (Biopharmaceuticals அல்லது Biologics) என்பது பாரம்பரிய இரசாயன முறைகளில் தயாரிக்கப்படுபவை அல்ல; உயிரணுக்கள் மற்றும் உயிரியல் அமைப்புகளிலிருந்து உருவாக்கப்படும் மேம்பட்ட மருந்துகள் ஆகும். துல்லியமான, குறிக்கோள் சார்ந்த சிகிச்சைகள் தேவைப்படும் சிக்கலான மற்றும் நீண்டகால நோய்களுக்கு உலகம் முழுவதும் சுகாதார அமைப்புகள் நகர்ந்து வருவதால், இந்தத் துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அரசின் விரிவான தொழில் மற்றும் புதுமைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, உற்பத்தி, மூலோபாய மற்றும் முன்னோடி துறைகள், சுகாதாரம், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட ஆறு முன்னுரிமை துறைகளில் குறிவைத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேம்பட்ட உயிர் உற்பத்தி (Advanced Biomanufacturing), ஆராய்ச்சி மற்றும் உயர் மதிப்புடைய பயோடெக் தயாரிப்புகளின் அளவுப்படுத்தல் (Scale-up) ஆகியவற்றில் இந்தியாவின் திறன்களை விரிவுபடுத்த அரசின் கவனம் அதிகரித்துவருவதை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது.
கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தியாவின் பயோ பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது. 2014-ல் சுமார் $10 பில்லியன் இருந்தது, 2024-க்குள் $165 பில்லியன்-ஐ கடந்துள்ளது. பயோடெக் புதுமைகள் தொடர்ந்தால், 2030-க்குள் இது $300 பில்லியன்-ஐ எட்டும், என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆராய்ச்சிகளை ஆய்வகத்திலிருந்து தயாரிப்புகளாக மாற்ற உதவும் வகையில், உயிர் உற்பத்தி கட்டமைப்பு, புதுமை தளங்கள் மற்றும் பைலட் வசதிகளை உருவாக்க அரசின் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முயற்சிகளுடன் ‘பயோபார்மா சக்தி’ திட்டம் இணைந்து செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் அரசு ஒப்புதல் அளித்த BioE3 (Biotechnology for Economy, Environment and Employment) கொள்கையும், உயர் செயல்திறன் கொண்ட உயிர் உற்பத்தி, பயோ-AI மையங்கள் மற்றும் பயோஃபவுண்ட்ரிகள் மூலம் இந்தியாவின் பயோடெக்னாலஜி சூழலை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
சுகாதார தொழில்நுட்பங்களில் தன்னிறைவை அடைவதும், உயர் மதிப்புடைய மருந்துகள் உற்பத்தியை ஊக்குவிப்பதும் என்ற அரசின் கொள்கை முன்னுரிமைகளுக்கிடையே இந்த புதிய நிதி ஒதுக்கீடு வந்துள்ளது. சிக்கலான உயிர் மருந்துகளுக்கான இறக்குமதி சார்பை குறைப்பதும், உள்ளூர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன்களை உயர்த்துவதும் இதன் முக்கிய நோக்கங்களாகும்.
உயிர் மருந்துகள், உயிர் தொழில் தயாரிப்புகள், வேளாண் பயோடெக் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய இந்தியாவின் பயோ பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் பயோடெக் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதுடன், அரசின் கொள்கை ஆதரவும் தனியார் முதலீடுகளும் இணைந்து இந்தத் துறையின் பொருளாதார பங்களிப்பை அதிகரித்துள்ளன.
பட்ஜெட் 2026-ல் அறிவிக்கப்பட்ட ₹10,000 கோடி ‘பயோபார்மா சக்தி’ திட்டம், உயிர்தொழில்நுட்பம் மற்றும் சுகாதார புதுமைகள் அரசின் மூலோபாய முன்னுரிமை பட்டியலில் உயர்ந்த இடம் பெறும் இக்காலகட்டத்தில், நாட்டிற்கு மிக முக்கியமான துறைகளில் திறன் வளர்ப்பை நோக்கமாகக் கொண்ட நீண்டகால முயற்சிகளை வெளிப்படுத்தும் முக்கிய நிதி உறுதிப்பாட்டாகும்.