மத்திய பட்ஜெட் 2026: தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் 'அரிய வகை கனிம வழித்தடங்கள்' அமைக்க முன்மொழிவு!

01:00 PM Feb 01, 2026 | Induja Raghunathan

சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைப்பதற்காக, இந்திய அரசு 'அரிய வகை கனிம வழித்தடங்களை' (Rare Earth Corridors) உருவாக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2026 தாக்கலின் போது இன்று அறிவித்தார்.

மாநிலங்களுக்கு ஊக்கம்

கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற கனிம வளம் மிக்க மாநிலங்களில் இந்தத் தனித்துவமான வழித்தடங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம்:

  • கனிம அகழ்வாராய்ச்சி மற்றும் பதப்படுத்துதல் மேம்படும்.
  • உள்நாட்டு ரசாயன உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும்.
  • இறக்குமதி மீதான சார்பு பெருமளவு குறையும்.

தொழில்துறையினருக்கு நிம்மதி

மேம்பட்ட உற்பத்தி மூலம் பொருளாதார வளர்ச்சியை எட்டும் இலக்கின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இது வாகன உற்பத்தி, பாதுகாப்புத் துறை, விண்வெளி ஆய்வு மற்றும் மின்சார வாகன (EV) துறையினருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டில், 'பெர்மனன்ட் மேக்னட்' எனப்படும் அரிய வகை காந்தங்களின் ஏற்றுமதிக்கு சீனா கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் மின்சார வாகன உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். தரவுகளின்படி, 2024-25 காலகட்டத்தில் இந்தியா தனது காந்தத் தேவையில் 80% முதல் 90% வரை சீனாவையே நம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசின் அதிரடி நடவடிக்கைகள்

இந்த சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது:

  • நிதியுதவி: கடந்த நவம்பர் மாதம், அரிய வகை காந்தங்கள் (REPM) உற்பத்தியை ஊக்குவிக்க ₹7,280 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

  • உற்பத்தி இலக்கு: ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் காந்தங்களை உற்பத்தி செய்யும் வகையில் முழுமையான உள்நாட்டு விநியோகச் சங்கிலியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

  • ரசாயனப் பூங்காக்கள்: மாநிலங்களில் மூன்று ரசாயனப் பூங்காக்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது 'கிளஸ்டர்' (Cluster) முறையில் செயல்படும் என்பதால், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் விலையுயர்ந்த வசதிகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். 'சேலஞ்ச் ரூட்' (Challenge Route) எனப்படும் போட்டி அடிப்படையிலான நிதி மாதிரியின் மூலம் தகுதியான மாநிலங்கள் இதற்குத் தேர்ந்தெடுக்கப்படும்.