
அனைத்து நாடுகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயர்த்துவதாக சனிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் பின்னர் ஒரு நாள் முன்பு அறிவிக்கப்பட்ட 10 சதவீத வரி உயர்வை உடனடியாக 15 சதவீதமாக மாற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அமல்படுத்திய பரவலான வரிகள் சட்டவிரோதமானவை என்றும், அதிபரின் அதிகார வரம்பை மீறியவை என்றும் அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு பதிலளித்த டிரம்ப், 150 நாட்களுக்கு தற்காலிகமாக 10 சதவீத ‘அட் வலோரெம்’ (ad valorem) இறக்குமதி கூடுதல் வரி விதிப்பதாக பிப்ரவரி 24 முதல் அமலுக்கு வரும் வகையில் பிரகடனம் வெளியிட்டிருந்தார். ad valorem என்றால் விலை பெறுமானப்படி, மதிப்பீட்டின் படி அல்லது மதிப்பிற்குத் தக சுருங்கக் கூறின் பொருளின் சந்தைமதிப்பிற்குத் தக வரி விதிப்பதே ‘அட் வலோரெம்.’
“அமெரிக்காவை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பல நாடுகளுக்கு எதிராக சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட 15 சதவீத வரி அளவிற்கு உயர்த்துகிறேன்,” என்று சமூக வலைதளத்தில் டிரம்ப் குறிப்பிட்டார். மேலும், வருங்கால மாதங்களில் புதிய மற்றும் சட்டபூர்வமான வரி அமைப்பை நிர்ணயிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல் குறிப்பில், 1974ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122ன் கீழ், சர்வதேச கட்டணச் சிக்கல்களை சமாளிக்க அதிபருக்கு இந்த அதிகாரம் இருப்பதாக விளக்கப்பட்டுள்ளது.
இத்தருணத்தில், சில முக்கிய பொருட்கள் இந்த தற்காலிக இறக்குமதி கூடுதல் வரியிலிருந்து விலக்கு பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய கனிமங்கள், நாணய உலோகங்கள், எரிசக்தி மற்றும் எரிசக்தி பொருட்கள், உரங்கள், சில வேளாண் பொருட்கள், மருந்துகள், குறிப்பிட்ட மின்னணு சாதனங்கள், பயணிகள் வாகனங்கள் மற்றும் சில வான்வெளி தொடர்பான பொருட்கள் அடங்கும்.
இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்த டிரம்ப், உச்சநீதிமன்ற நீதிபதிகளை குற்றம் சாட்டினார். அதேசமயம், இந்தியாவுடன் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
“இந்தியா இப்போது அமெரிக்காவுக்கு வரி செலுத்தும்; நாங்கள் அவர்களுக்கு செலுத்தமாட்டோம். இது முந்தைய நிலைக்கு மாற்றானது,” என்று அவர் கூறினார்.
இதுகுறித்து இந்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் அறிவிப்புகள் மற்றும் அதன் விளைவுகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்டில் அமெரிக்கா இந்தியாவுக்கு 25 சதவீத பரஸ்பர வரி விதித்தது. பின்னர், ரஷ்யக் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக கூடுதல் 25 சதவீதம் விதிக்கப்பட்டதால், மொத்தம் 50 சதவீதமாக உயர்ந்தது. அதன்பின் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் 25 சதவீத தண்டனை வரி நீக்கப்பட்டு, 25 சதவீதம் மட்டும் நிலுவையில் இருந்தது.
புதிய அறிவிப்பின்படி, இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீதத்திற்கு பதிலாக 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. தற்போது அதனை 15 சதவீதமாக உயர்த்துவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது அமெரிக்காவின் நிலையான ‘மோஸ்ட் ஃபேவர்டு நேஷன்’ (MFN) வரிக்கு மேலாக விதிக்கப்படும்.
உதாரணமாக, ஒரு பொருளுக்கு 5 சதவீத எம்.எப்.என். வரி இருந்தால், அதற்கு மேலாக 15 சதவீதம் சேர்த்து மொத்தம் 20 சதவீதமாகும். முன்னதாக இது 5 + 25 சதவீதமாக இருந்தது.
150 நாட்கள் காலக்கெடு முடிந்த பின், அமெரிக்கா எந்த அளவு வரி விதிக்கும் என்பது குறித்து தெளிவில்லை. இருநாடுகளுக்கிடையிலான முதல் கட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் சட்ட உரையை இறுதி செய்ய, இந்திய அதிகாரிகள் பிப்ரவரி 2023-2026, 2026ல் வாஷிங்டனில் கலந்துரையாட உள்ளனர். வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மார்ச் மாதத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகி, ஏப்ரலில் அமலுக்கு வரும் என முன்பே தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதியாளர்களின் அமைப்பான Federation of Indian Export Organizations (FIEO), 10 சதவீத வரி குறைப்பு தொழிலாளர் ஆதாரமுள்ள துறைகளுக்கு போட்டித்திறனை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. எனினும், எஃகு, அலுமினியம், வெள்ளி மற்றும் சில வாகனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பிரிவு 232ன் கீழான கூடுதல் வரிகள் இன்னும் சவாலாக உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களால் உலக வர்த்தகத்தில் உறுதியற்ற நிலை உருவாகியுள்ளதாகவும், நாடுகள் தங்களது வர்த்தக தளர்வுகளை மறுபரிசீலனை செய்யலாம் என்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2021-25 காலகட்டத்தில், அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்து, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 18 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டில் இருநாடுகளுக்கிடையிலான மொத்த வர்த்தகம் 186 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.