தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வர்த்தகம், வணிகம், இருதரப்பு முதலீடுகள் மற்றும் சகோதர நகர ஒத்துழைப்பு, இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர் துறையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகிய துறைகளில், கஜகஸ்தான், நியூசிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன், தமிழ்நாடு 7 நிறுவன ரீதியான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது, என இது தொடர்பான அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
- தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 67,452 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 1,06,998 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
- இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 55 திட்டங்கள் புதிய திட்டங்களாகவும் (Greenfield), 50 திட்டங்கள் ஏற்கனவே செயல்பட்டுவரும் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களாகவும் (Brownfield) உள்ளன.
- 100 நாட்களில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடுகள்: இந்த மாநாட்டிற்குமுன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இன்றைய, 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்' மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் (1,02,514 கோடி ரூபாய்) ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,21,788 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட சில முக்கிய திட்டங்களின் விவரங்கள்:
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் : தூத்துக்குடியில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ஏவுகலன் தயாரிப்பு நிறுவனமாக, ஏவுகலன்களின் உற்பத்தி, சேமிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதிகளை அமைக்க உள்ளது. இதற்காக 250 கோடி ரூபாய் முதலீடு செய்து, 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
அக்னிகுல் காஸ்மோஸ் : தூத்துக்குடியில் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார், மீண்டும் பயன்படுத்தக்கூடிய திரவ உந்துவிசை ஏவுகலன் தயாரிப்பு நிறுவனமாக, மீண்டும் பயன்படுத்தக்கூடிய திரவ உந்துவிசை ஏவுகலன்களின் ஒருங்கிணைப்பு மற்றும் தயாரிப்பு வசதிகளை அமைக்கவுள்ளது. இதற்காக 400 கோடி ரூபாய் முதலீடு செய்து, 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
அல்ட்ராவயலட் : கிருஷ்ணகிரியில் அல்ட்ராவயலட் நிறுவனம், மின்சார இருசக்கர வாகனங்களுக்கான உற்பத்தி ஆலையை (OEM) அமைக்கவுள்ளது. இதற்காக 779 கோடி ரூபாய் முதலீடு செய்து, 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
சூப்பர் மைக்ரோ : சென்னையில், அமெரிக்காவைச் சேர்ந்த Fortune 500 (தரவரிசை 292) நிறுவனமான சூப்பர் மைக்ரோ, சர்வர்கள் (Servers) உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கவுள்ளது. இதற்காக 477 கோடி ரூபாய் முதலீடு செய்து, 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
YKK, ஜப்பான் : திருவள்ளூரில் ஜப்பானைச் சேர்ந்த YKK நிறுவனம், ஜிப்பர்கள் மற்றும் இணைப்பு சாதனங்கள் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்கவுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜிப்பர் மற்றும் இணைப்பு சாதனங்கள் உற்பத்தியாளரான YKK, இதற்காக 1,651 கோடி ரூபாய் முதலீடு செய்து, 4,316 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவுள்ளது.
ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ் : ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ் நிறுவனம், நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் ஆலையைத் தமிழ்நாட்டில் அமைக்கவுள்ளது. குஜராத்திற்கு வெளியே இந்நிறுவனம் மேற்கொள்ளும் முதல் முதலீடு இதுவாகும். இதற்காக 500 கோடி ரூபாய் முதலீடு செய்து, 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
ஆவிட் குழுமம் (Avid Group) : ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆவிட் குழுமம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா, சுகாதாரம், சுரங்க உபகரண உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. முதற்கட்டமாக, 7,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 12,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், மேற்கண்ட துறைகளில், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முதலீடு மேற்கொள்ளவுள்ளது.
பிட்சர் (BITZER), ஜெர்மனி : ஜெர்மனியைச் சேர்ந்த உலகின் முன்னணி HVAC கம்ப்ரசர் உற்பத்தியாளரான BITZER, இந்தியாவில் தனது முதல் HVAC கம்ப்ரசர்கள் உற்பத்தி ஆலையை சுமார் 300 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் அமைக்கிறது.
JK டயர் : JK டயர் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனது டயர் உற்பத்தித் திட்டத்தை 5,143 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,510 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், விரிவாக்கம் மேற்கொள்ளவுள்ளது.
டைம்லர், ஜெர்மனி : ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டைம்லர் நிறுவனம், தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில், வணிக வாகனங்கள் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம், ஒரகடத்தில் அமைந்துள்ள தனது 400 ஏக்கர் பரப்பிலான உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்தை 4,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் வணிக வாகனங்களுக்கான வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி ஆகிய பணிகளுக்காக இந்த மையத்தை மேம்படுத்தவுள்ளது.
மேற்கூறிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர், சென்னை, தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, இராணிப்பேட்டை, வேலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் பரவலாக மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் இராமநாதபுரம் மாவட்டத்தில், முதன்முதலாக தொழில் திட்டம் தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உயிரியல் அறிவியல், வாகன உற்பத்தி, மின்னணுவியல் மற்றும் குறைக்கடத்திகள், ஆழ்தொழில்நுட்பம், நுகர்வோர் மின்னணுவியல், ஜவுளி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு, கடல்சார் தொழில்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், வர்த்தகம், வணிகம் மற்றும் இருதரப்பு முதலீடுகள், இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர் துறையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகிய துறைகளில், கஜகஸ்தான், நியூசிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன், தமிழ்நாடு 7 நிறுவன ரீதியான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
Edited by Induja Raghunathan