தோல்வியடைந்த கல்வித் தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர் பைஜூ ரவீந்திரனுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.
2024 ஏப்ரல் மாதம் முதல் அவரது சொத்துகள் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த பல உத்தரவுகளை அவர் மீறியதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் அதிகாரிகளிடம் சரணடையவும், சிங்கப்பூர் நாணய மதிப்பில் 90,000 டாலர் அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தொடர்புடைய நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்த பீயார் முதலீட்டு நிறுவனத்தின் சட்டபூர்வ உரிமை ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த சிறைத் தண்டனை, ஏற்கெனவே உலகம் முழுவதும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் பைஜூ ரவீந்திரனுக்கு மேலும் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்காவில், 1.2 பில்லியன் டாலர் கடன் தொடர்பான இழப்புகளை மீட்டெடுக்க கடனளிப்பவர்கள் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பைஜூ ரவீந்திரன் உடனடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. தற்போது அவர் சிங்கப்பூரிலா அல்லது வேறு நாட்டில் உள்ளாரா என்பது தெளிவாகவில்லை.
திங்க் அண்ட் லேர் என்ற கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கியதன் மூலம் பைஜூ ரவீந்திரன் இந்திய ஸ்டார்ட்அப் உலகின் முக்கிய வெற்றிக் கதைகளில் ஒருவராக உயர்ந்தார். உலகளாவிய முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து பெரும் முதலீடுகளை ஈர்த்த அவர், ஒருகாலத்தில் பில்லியனராகவும் உருவெடுத்தார்.
ஆனால் தற்போது, வேலைநீக்கங்கள் மற்றும் செலவுக் குறைப்புகளில் ஈடுபட்டிருந்த காலத்தில் கத்தார் இன்வெஸ்ட்மெண்ட் அதாரிட்டி நிறுவனத்தின் துணை அமைப்பான கத்தார் ஹோல்டிங்ஸ் தாக்கல் செய்த வழக்கை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வருகிறார்.
இந்த வழக்கில் கத்தார் ஹோல்டிங்ஸ் சார்பில் Drew & Napier சட்ட நிறுவனம் ஆஜரானது. பைஜூஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் சார்பில் ஃபெர்வண்ட் சாம்பர்ஸ் வழக்கை முன்னிலைப்படுத்தியது.