இந்தியாவின் டிஜிட்டல் பொது கட்டமைப்பு (DPI) முயற்சிகள் 2030க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4% வரை பங்களிக்கக்கூடும் என்று NITI ஆயோக் வெளியிட்ட புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. தற்போது இந்த பங்களிப்பு சுமார் 1% அளவில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
'DPI@2047 for Viksit Bharat – A Strategic Roadmap to Enable Non-linear Inclusive Socio-economic Growth' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, இந்தியா வரலாற்றிலேயே முக்கியமான மாற்ற கட்டத்தில் நிற்கிறது என்று சுட்டிக்காட்டுகிறது.
அறிக்கையின் படி, DPI 2.0 வளர்ச்சியை மாநில அடிப்படையிலான மையமற்ற முயற்சிகள் வழியாக முன்னேற்றுவது முக்கியம். மத்திய அரசு மற்றும் NITI ஆயோக் ஊக்குவிப்பாளர்களாக செயல்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இரண்டாண்டு சுற்றுகளில் ஒத்துழைப்பு முறையில் துறை மாற்றங்களை செயல்படுத்தும் திட்டமும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுகளில் முதல் ஆண்டில் சில முன்னோடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாதிரி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அதன் தாக்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். இரண்டாம் ஆண்டில் அந்த மாதிரி திட்டங்களை மற்ற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தி பரவலாக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.
மேலும், 2026-27 திட்டங்களின் கீழ் உலகளாவிய கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவது முக்கியம் என்றும், இதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச ஒத்துழைப்பு மாதிரி உருவாக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது.
அறிக்கையை வெளியிட்ட NITI ஆயோக் துணைத் தலைவர் சுமன் பேரி, 2047க்குள் ‘விக்சித் பாரத்’ இலக்கை அடைய, உட்சேர்க்கை, விரிவாக்கத்தன்மை மற்றும் பொருளாதார உற்பத்தித் திறன் வளர்ச்சி ஆகியவை முக்கியம் என தெரிவித்தார். கடந்த ஒரு தசாப்தத்தில் DPI, சேவைகள் வழங்கல் மேம்பாடு, நிதி உட்சேர்க்கை மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதே நிகழ்ச்சியில், பேசிய தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், டிஜிட்டல் இருப்பு மட்டுமே போதாது, அது பொருளாதார சக்தியாக மாற வேண்டும் என்றார். மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் இந்தியாவின் எரிசக்தி சார்ந்த சவால்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இறக்குமதி எரிபொருட்களில் சார்ந்திருப்பது இந்திய வளர்ச்சிக்கு முக்கிய சிக்கலாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.