ஐஐடி மெட்ராஸ் (Indian Institute of Technology, Madras) தனது முதலாவது தொழில்நுட்ப உச்சிமாநாட்டை நடத்தி புதிய முன்னேற்றக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாநாட்டை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று (05.05.2026) புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்தார்.
“ஐஐடி மெட்ராஸ்-ல் இருந்து இந்தியாவிற்காக இணைந்து உருவாக்குவோம்,” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாடு, தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகள் இணைந்து வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கும் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
மாநாட்டில் பேசிய தர்மேந்திர பிரதான்,
"இந்தியாவின் புத்தாக்கச் சூழல் ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளது எனக் குறிப்பிட்டார். ஆராய்ச்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாகவும், ஐஐடி மெட்ராஸ் போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு மையங்கள் மூலம் ஆராய்ச்சியை முன்னெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆராய்ச்சி ஆய்வுக் கட்டுரைகளில் மட்டும் முடங்காமல், அது அன்றாட வாழ்க்கையில் பயன்படும் தீர்வுகளாக மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், வெளிநாடுகளில் இந்தியர்களால் உருவாக்கப்படும் பல தொழில்நுட்பங்களை இந்திய நிறுவனங்கள் மீண்டும் வாங்கும் நிலை இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அவற்றை நாட்டிலேயே உருவாக்கி முதலீடு செய்ய வேண்டியது அவசியம், என கூறினார்.
இந்தியாவுக்கு வலுவான உள்நாட்டு சந்தை இருப்பதால், அது உற்பத்தியாளரும் நுகர்வோரும் ஆகும் சாதகமான சூழல் கொண்ட நாடாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தனியார் துறை மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக முன்மொழியப்பட்ட ரூ.1 லட்சம் கோடி நிதி, அரசின் உறுதியை காட்டுவதாகவும் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் பல முக்கிய மையங்கள் தொடங்கப்பட்டன
* என்டிபிசி ஆதரவுடன் இருதய ஆராய்ச்சி மையம்
* பிபிசிஎல் ஆதரவுடன் ரோபோ உதவியுடனான அறுவை சிகிச்சை தொழில்நுட்ப மையம்
* எச்எஸ்பிசி ஆதரவுடன் திறன்சார் ஆதார மையம் மற்றும் எரிசக்தி மாற்ற மறுசுழற்சி மையம்
மேலும், மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆதரவுடன் “போதன் ஏஐ” என்ற புதிய மையத்தையும் ஐஐடி மெட்ராஸ் அறிவித்தது. 2027க்குள் 10 லட்சம் ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கற்பித்தல் பயிற்சி வழங்கும் நோக்கில் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் திட்டம் இதன் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம், கவிராஜ் நாயர், வசுதா நரசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், மத்திய அரசின் பல துறைச் செயலாளர்கள், என்டிபிசி, பிபிசிஎல், எச்எஸ்பிசி நிறுவனங்களின் உயர்நிலை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இதில் பங்கேற்றனர்.
மாநாட்டில் உரையாற்றிய இயக்குநர் வி. காமகோடி,
“சிறப்பாய்வு மையங்கள் மூலம் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியில் முன்னணி நிலையை அடைந்துள்ளது. 2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் நோக்கில் செயல்பாடுகளை வேகப்படுத்துகிறோம்,” என்றார்.
அதேபோல், பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம் கூறுகையில்,
“ஆராய்ச்சி பொதுமக்களுக்கு சென்றடையும் போது தான் அதன் உண்மையான தாக்கம் வெளிப்படும்,” என்று கூறினார்.
இம்மாநாட்டில், “சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதல்: ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தின் 25 ஆண்டுகாலத் தாக்கம்,” என்ற நூலும் வெளியிடப்பட்டது.