
இந்தியாவில் செயல்படும் உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres - GCCs) எண்ணிக்கை 2,117 ஆக உயர்ந்துள்ளதாக நாஸ்காம் மற்றும் ஸின்னோவ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. இம்மையங்களில் தற்போது சுமார் 23.6 லட்சம் நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர். 2025-26 நிதியாண்டு நிலவரப்படி, இவ்வமைப்புகள் உருவாக்கிய மொத்த வருவாய் 98.4 பில்லியன் அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது.
“GCC Value Orbit: From Delivery Engine to Enterprise Nerve Centre” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், 2021 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ஜிசிசிகளின் வளர்ச்சி 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதியதாக உருவாகிய ஜிசிசிகளில் 96 சதவீதம் மையங்கள் துவக்கத்திலிருந்தே தயாரிப்பு மற்றும் போர்ட்ஃபோலியோ பொறுப்புகளுடன் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும், பழைய “crawl-walk-run” வளர்ச்சி முறை தற்போது மாற்றமடைந்துள்ளதாகவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2021க்குப் பிறகு தொடங்கப்பட்ட ஜிசிசி-களில் சுமார் பாதி மையங்கள் செயற்கை நுண்ணறிவை (AI) மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட ஜிசிசிகளில் AI மற்றும் மெஷின் லெர்னிங் திறன்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதற்காக 250-க்கும் மேற்பட்ட சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருவதுடன், சுமார் 2.5 லட்சம் AI நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவின் ஜிசிசி சூழல் அடிப்படையான மாற்றத்தை சந்தித்து வருவதாக நாஸ்காம் தலைவர் ராஜேஷ் நம்பியார் தெரிவித்துள்ளார். அளவை மையமாகக் கொண்ட வளர்ச்சியிலிருந்து மதிப்பு மையமான வளர்ச்சிக்குத் துறை நகர்ந்து வருவதாகவும், இதில் AI முக்கிய ஊக்கியாக செயல்படுவதாகவும் அவர் கூறினார். உலகளாவிய தயாரிப்புகள், தளங்கள் மற்றும் வணிக முடிவுகளுக்கான பொறுப்புகளை இந்திய ஜிசிசிகள் ஏற்றுக்கொண்டு வருவதால், இந்தியா உலக நிறுவனங்களின் முக்கிய மூளை மையமாக உருவெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
AI தற்போது தனிப்பட்ட திட்டமாக அல்லாமல், தயாரிப்புகள், உள்நாட்டு செயல்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளில் பரவலாக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாக மாறியுள்ளதாக அறிக்கை கூறுகிறது. AI என்ன செய்யும் என்ற விவாதத்தைத் தாண்டி, அதை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் பொருளாதார ரீதியாக எவ்வாறு பயனுள்ளதாக்குவது என்பதில் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்திய ஜிசிசிக்கள் வேகமாக முதிர்ச்சி அடைந்து வருவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தற்போது சுமார் 50 சதவீத ஜிசிசிகள் உயர் முதிர்ச்சி நிலையை அடைந்துள்ளன. மேலும், 64 சதவீத மைய தலைவர்கள் தள நிர்வாகத்துடன் உலகளாவிய செயல்பாட்டு பொறுப்புகளையும் ஏற்று வருகின்றனர். குறிப்பாக சைபர் பாதுகாப்பு மற்றும் AI நிர்வாகம் போன்ற முக்கிய துறைகளில் இவர்களின் பங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் AI மற்றும் டிஜிட்டல் திறனாளிகள் உலக கவனத்தை ஈர்த்துள்ளதாக Zinnov நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாரி நடராஜன் தெரிவித்துள்ளார்.
"எதிர்கால வளர்ச்சிக்காக திறன்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், அதைச் சிறப்பாக செயல்படுத்தும் மையங்களே இந்தியாவின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு காரணமாக இருப்பார்கள்," என்றும் அவர் கூறினார்.