சென்னை Tvasta Manufacturing Solutions என்ற ஆழ்தொழில்நுட்ப (Deep Tech) ஸ்டார்ட்அப் நிறுவனம், உலகின் முதல் AI தயார்நிலை கொண்ட 3D கான்கிரீட் பிரிண்டரான ‘Cedar’-ஐ அறிமுகப்படுத்தி, ‘மேட் இன் இந்தியா’ தொழில்நுட்பத்தை உலகளாவிய கட்டுமான துறைக்கு கொண்டு சென்றுள்ளது.
14Trees என்ற உலகளாவிய கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த ‘Cedar’ 3D கான்கிரீட் பிரிண்டர், இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது அளவுக்கேற்ற தொழில்துறை உற்பத்தி செயல்முறைகளை கொண்டிருப்பதுடன், ஒரே தரத்தை உறுதி செய்யும் திறனும், வேகமான செயல்பாட்டையும் வழங்குகிறது.
ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் 2016ஆம் ஆண்டு தொடங்கிய Tvasta நிறுவனம், கட்டுமானத் துறையில் தானியக்கம் மற்றும் ரோபோடிக்ஸ் அடிப்படையிலான 3D பிரிண்டிங் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. சென்னை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம், தற்போது அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.
‘Cedar’ தொழில்நுட்பம் குறித்து பிரான்சுவா பெரட் கூறியபோது,
“கட்டுமான 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் தொழில்நுட்ப ரீதியாக ஏற்கனவே தன்னுடைய திறனை நிரூபித்துவிட்டது. ஆனால் உலகளாவிய கட்டுமானத் துறையில் இது பரவலாக பயன்பட வேண்டுமெனில், அது பொருளாதார ரீதியாகவும் வலுவானதாக இருக்க வேண்டும். அந்த நோக்கத்தில்தான் Cedar உருவாக்கப்பட்டது. இது திட்டச் செலவுகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்து, கட்டுமான நிறுவனங்கள் பெரிய அளவில் 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சூழலை உருவாக்கும்,” என்றார்.
மேலும் இதுபற்றி பேசிய வி.எஸ். ஆதித்யா,
“மேம்பட்ட உற்பத்தி திறன்கள், நவீன ரோபோடிக்ஸ் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், உலகின் பல்வேறு கட்டுமான சூழல்களிலும் செயல்படக்கூடிய வலுவான மற்றும் நம்பகமான அமைப்பாக Cedar உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.
இந்த ‘Cedar’ அமைப்பின் முக்கிய புதுமைகளில் ஒன்று, இது சிறப்பு மோர்டார் கலவைகள் இல்லாமல் சாதாரண கான்கிரீட்டையே பயன்படுத்தி 3D பிரிண்டிங் செய்யும் திறன் கொண்டதாக இருப்பது. தற்போது பெரும்பாலான 3D பிரிண்டிங் அமைப்புகள் அதிக செலவான மோர்டார் அடிப்படையிலான பொருட்களை பயன்படுத்துகின்றன. ஆனால் Cedar, சாதாரண கான்கிரீட் கலவைகளுடன் செயல்படுவதால், கட்டுமானப் பொருட்களின் செலவை ஐந்து மடங்கு வரை குறைக்க முடியும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘14Trees AI Companion’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தளம், உள்ளூர் வளங்களை பயன்படுத்தி கட்டுமானப் பொருட்களின் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது. ஆயிரக்கணக்கான கலவை வடிவமைப்புகளை AI மூலம் பகுப்பாய்வு செய்து, குறைந்த செலவு, அதிக கட்டமைப்பு வலிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவு ஆகியவற்றுக்கு இடையிலான சிறந்த சமநிலையை இது கண்டறிகிறது.”
Cedar பிரிண்டர், 10 மீட்டர் உயரம் வரை அச்சிடும் திறன் கொண்டதுடன், 240 சதுர மீட்டர் வரை விரிவாக்கக்கூடிய அமைப்பையும் கொண்டுள்ளது. இதனால் வீடுகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு இது ஏற்றதாக இருக்கும்.
14Trees நிறுவனம், உலகம் முழுவதும் Cedar அமைப்புகளை செயல்படுத்தி வருவதுடன், வடிவமைப்பு மேம்பாடு, பொருள் ஆய்வு, தொழில்நுட்ப பயிற்சி மற்றும் திட்ட அமலாக்க சேவைகளையும் வழங்கி வருகிறது.
14Trees என்பது Holcim, British International Investment மற்றும் அமேசான் நிறுவனத்தின் Climate Pledge Fund ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும்.