இந்தியாவின் காப்புரிமை (Patent) சூழல் வேகமாக வளர்ந்து வருவதாக Nasscom வெளியிட்ட 'Patent Pulse 2026' அறிக்கை தெரிவிக்கிறது. 2025–26 நிதியாண்டில் (FY26) காப்புரிமை விண்ணப்பங்கள் 1,40,000-ஐ கடந்துள்ளன. இது தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றமாகும்.
2026-ல் விண்ணப்பங்கள் 30.2% உயர்ந்துள்ளன. இதற்கு முன் 2025-ல் 19.8% உயர்வு காணப்பட்டது. இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம் உள்ளூர் விண்ணப்பதாரர்களின் பங்கு அதிகரித்ததே ஆகும். இந்தியாவில் உள்ள விண்ணப்பங்கள் ஆண்டு அடிப்படையில் 46.2% அதிகரித்துள்ளன. தற்போது மொத்த விண்ணப்பங்களில் சுமார் 70% உள்ளூர் விண்ணப்பங்களே ஆகும். இது ஸ்டார்ட்அப்’கள், MSME-கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிநபர் கண்டுபிடிப்பாளர்களின் அதிகரித்த பங்கேற்பை காட்டுகிறது.
துறைகளில் கணினி தொழில்நுட்பம் முன்னிலையில் உள்ளது. 2026-ல் மொத்த விண்ணப்பங்களில் இதன் பங்கு 19.1% ஆக உயர்ந்துள்ளது (2025-ல் 16.3%).
ஆனால், விண்ணப்பங்கள் அதிகரித்துள்ள போதிலும், காப்புரிமை வழங்கலில் (grants) கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2026-ல் வழங்கப்பட்ட காப்புரிமைகள் 21,400 ஆக குறைந்துள்ளன. இது 2025-ல் இருந்த 33,500-லிருந்து பெரிய சரிவாகும். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மொத்த விண்ணப்பங்களில் 40% அளவுக்கு பங்களித்தாலும், அவற்றுக்கு வழங்கப்படும் காப்புரிமைகள் சுமார் 10% மட்டுமே. இதற்கு மாறாக, பன்னாட்டு நிறுவனங்கள் மொத்த விண்ணப்பங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு குறைவாக இருந்தாலும், வழங்கப்படும் காப்புரிமைகளில் பாதிக்கு மேற்பட்டவை அவற்றுக்கே கிடைக்கின்றன.
இந்த நிலை, கல்வி ஆராய்ச்சிகளை வணிகரீதியாக மாற்றுவதில் இந்தியா இன்னும் சவால்களை எதிர்கொள்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும், இந்திய காப்புரிமை அலுவலகத்தில் பரிசோதகர்கள் (examiners) பற்றாக்குறை ஒரு முக்கிய தடையாக இருந்து, விண்ணப்பங்களின் செயலாக்க வேகத்தையும், வழங்கல் நேரத்தையும் பாதிக்கிறது.
Nasscom நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் தலைமைத் திட்ட அதிகாரியான சங்கீதா குப்தா, இந்தியாவின் அடுத்த கட்ட புதுமை வளர்ச்சி வெறும் விண்ணப்ப எண்ணிக்கையால் அல்ல, தரம், வணிகமயமாக்கல் மற்றும் உலகளாவிய தாக்கத்தால் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த அறிக்கை, விண்ணப்ப எண்ணிக்கையை மையமாகக் கொண்ட அணுகுமுறையிலிருந்து, மதிப்பை உருவாக்கும் காப்புரிமை சூழலுக்கு மாற்றம் தேவை என கூறுகிறது. குறிப்பாக, விண்ணப்பத்திலிருந்து வழங்கலுக்கு மாற்ற விகிதத்தை உயர்த்துதல், பரிசோதனை திறனை மேம்படுத்துதல், மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உரிமம் வழங்கல் மூலம் வணிகமயமாக்கல் வாய்ப்புகளை உருவாக்குதல் அவசியம் என பரிந்துரைக்கிறது.
மேலும், செயற்கை நுண்ணறிவு, டீப்-டெக், உயிரி தொழில்நுட்பம், செமிகண்டக்டர்கள் மற்றும் தூய்மையான ஆற்றல் போன்ற துறைகள், இந்தியா உலகளாவிய புதுமை முன்னணியில் நிலைநிறுத்த முக்கியமானவை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.