‘கதையல்ல நிஜம்’ - ஆப்பிள் நிறுவனப் பணி, ஆடம்பர வாழ்க்கையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டுநரான ராகேஷ்!

04:01 PM Apr 06, 2026 | muthu kumar

ஆப்பிள் நிறுவனத்தின் அதிக சம்பள வேலையை விடுத்து, ஆடம்பர வாழ்க்கையையும் விட்டு, ஆட்டோ ஓட்டுநராக வேண்டும் என்று யாரேனும் நினைப்பதுண்டோ? யாருக்காவது மனசு வருமா?

வரும்...! சுதந்திரமா, பணி அழுத்தமா? கார்ப்பரேட் உலகெனும் நித்யகண்ட பூர்ணாயுசு வாழ்க்கையா எது வேண்டும் என்பதில் சுதந்திரத்தைத் தேர்வு செய்தார் ராகேஷ்.

ஆம். கதையல்ல நிஜ. ஆப்பிள் நிறுவனம் போன்ற முன்னணி நிறுவனத்தில் வேலை செய்தும், உயர்ந்த சம்பளமும், ஆடம்பரமான வாழ்க்கையும் கொண்டிருந்த ராகேஷ், இன்று முற்றிலும் வேறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அமைதியும் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தையும் தேடி, அவர் எடுத்த இந்த முடிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ராகேஷ்

யார் இந்த ராகேஷ்?

ராகேஷின் தொழில் வாழ்க்கை ஒரு கனவு போலவே தொடங்கியது. ஆப்பிள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது, பெரிய சம்பளம், சௌகரியமான அலுவலகம் – எல்லாமே சிறப்பாக இருந்தது. பின்னர், பெரிய வங்கிகளிலும், கணினி உற்பத்தி நிறுவனங்களிலும் பணியாற்றினார். வெளிப்படையாகப் பார்த்தால், அவர் வாழ்ந்த வாழ்க்கை ஒரு “ட்ரீம் லைஃப்” போல இருந்தது. ஆனால் உள்ளுக்குள், ஒரு வெறுமை உணர்வு அவரை தொடர்ந்து துரத்தியபடியே தான் இருந்தது.

“ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் படிப்படியாக, அங்கே மனிதர்களை ஒரு கருவி போலவே பயன்படுத்துகிறார்கள் என்று உணர்ந்தேன். நான் மற்றவர்களை மகிழ்விக்க முயலும் ‘people pleaser’ ஆக மாறிவிட்டேன். என்னை நான் மறந்து விட்டேன். எல்லா வசதிகளும் இருந்தும், மனதில் மகிழ்ச்சி ஏன் இல்லை என்று நான் என்னையே கேள்வி கேட்டேன்,” என்கிறார் ராகேஷ்.

நிறுவன உலகின் மறைமுக எதிர்பார்ப்புகள், மன அழுத்தம் மற்றும் தந்திரமும் சூழ்ச்சியும் நிரம்பிய சூழல், அவரது வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பியது. சம்பளம் மற்றும் பதவி மட்டுமே வாழ்க்கையை நிறைவு செய்யாது என்பதை அவர் உணர்ந்தார்.

ஆனால், ராகேஷின் சவால்கள் வேலை இடத்திலேயே முடிவடையவில்லை. அவரது தந்தையுடன் ஏற்பட்ட அனுபவங்களும், பின்னர் திருமண வாழ்க்கையிலும் ஏற்பட்ட பிரச்சனைகளும், அவரை மன அழுத்தத்தில் ஆழ்த்தின.

அவரது மனநிலை மேலும் மோசமடைந்தது. அவர் நிம்ஹான்சிலும் விக்டோரியா மருத்துவமனையிலும்ல் சிகிச்சை பெற்றார். நீண்ட காலம் மன அழுத்தத்திற்கான மருந்துகளையும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

“நான் ஒரே இடத்தில் அமர்ந்து, ஒரே எண்ணத்தை ஆறு அல்லது ஏழு மணி நேரம் தொடர்ந்து சிந்தித்து கொண்டிருப்பேன். நான் என்னையே வீட்டுக்குள் பூட்டி கொண்டிருந்தேன்,” என்று அவர் தனது தனிமையின் ஆழத்தை விவரிக்கிறார்.

மருந்துகளால் மட்டுமே கட்டுப்படுத்தப்படாமல், இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று ராகேஷ் முடிவு செய்தார். அவர் உளவியல் பற்றி கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். குறிப்பாக “dark triad” எனப்படும் narcissism, Machiavellianism, மற்றும் psychopathy ஆகிய மனப்பாங்குகளைப் பற்றி ஆய்வு செய்து, தன்னைச் சுற்றியிருந்த மனிதர்களின் நடத்தை பற்றி புரிந்துகொண்டார்.

அதோடு, உடல் ஒழுக்கத்திலும் கவனம் செலுத்தினார். Intermittent fasting மூலம் 15 கிலோ எடை குறைத்தார். Muay Thai மற்றும் Ju-Jitsu போன்ற தற்காப்புக் கலைகளை பயின்று, தனது நம்பிக்கையை மீண்டும் பெற்றார்.

அவரது முயற்சி வீணாகவில்லை. மாநில அளவிலான போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று, தனது வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை அடைந்தார்.

ஒவ்வொரு வேலையும் ஒரு பாடம்

ராகேஷ் எந்த வேலையையும் சிறியது, பெரியது என்று பார்க்கவில்லை. உணவு டெலிவரி செய்வது, பைக் டாக்ஸி ஓட்டுவது, ஜிம் உதவியாளராக வேலை செய்து தரை மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்வது போன்ற பல வேலைகளை செய்தார்.

ஒவ்வொரு அனுபவமும் அவருக்கு சுயநிறைவு, பணிவு மற்றும் மன உறுதியை கற்றுக்கொடுத்தது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று ராகேஷ் பெங்களூருவில் தனது மின்சார ஆட்டோவை ஓட்டி வருகிறார். அதே சமயம், நடனம் மற்றும் ஓவியம் போன்ற தனது விருப்பங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

அவரது வாழ்க்கை பயணம் ஒரு முக்கியமான உண்மையை எடுத்துக்காட்டுகிறது – உண்மையான சுதந்திரமும் மகிழ்ச்சியும் சம்பளத்திலும் பதவியிலும் இல்லை; அது நம்மை நாம் மீண்டும் கண்டுபிடிப்பதிலும், வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை அறிதலிலும் உள்ளது.

life is a self-fashioning என்று சொல்லப்படுவதுண்டு. மன அழுத்தம் தரும் சூழல், கடும் மனச்சோர்வு அதனையடுத்த மனச்சிதைவு நோய்க்கு இன்றைய உலகில் பலரும் ஆட்பட்டு துன்பப்பட்டு வருகின்றனர். குடும்பங்கள் செயலற்றுப்போகின்றன. உறவுகள் வீழ்ச்சிகண்டு வருகின்றன. இத்தகு சூழ்நிலையில் ராகேஷின் மீட்டெழுச்சி உண்மையில் வாழ்க்கைப் பாடமே.

தகவல் உதவி: இந்தியா டுடே