
ஐஐடி நுழைவுத் தேர்வில் தோல்வியடைவது பல மாணவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமையும். ஆனால், அந்தத் தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றியுள்ள ஒரு இந்திய தொழில்நுட்ப நிபுணரின் வாழ்க்கைப் பயணம் தற்போது சமூக வலைதளங்களில் பலருக்கு ஊக்கமளித்து வருகிறது.
X தளத்தில் @JainJec2013 என்ற கணக்கைப் பயன்படுத்தும் அவர், ஐஐடி நுழைவுத் தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்த நிலையிலிருந்து தனது துறையில் இளம் வயதிலேயே துணைத் தலைவராக (Vice President) உயர்ந்த விதத்தை பகிர்ந்துள்ளார்.

தனது பதிவில், அந்தக் காலகட்டம் எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை நினைவுகூர்ந்த அவர்,
“ஒரு கட்டத்தில் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று உண்மையாகவே தோன்றியது,” என்று குறிப்பிட்டார். சிறிய நகரத்தில் வளர்ந்ததால், தோல்விக்குப் பிறகு மற்றவர்களின் ஒப்பீடுகளும், அமைதியான விமர்சனங்களும் மன அழுத்தத்தை அதிகரித்ததாக அவர் தெரிவித்தார்."
ஐஐடியில் இடம் பெற முடியாததால், தனது சொந்த ஊரை விட்டு மற்றொரு நகரில் உள்ள அரசு கல்லூரியில் சேர்ந்தார். அங்கு பொருளாதார சிக்கல்கள் அவரைத் தொடர்ந்து வந்தன. பெற்றோரால் கல்விச் செலவுகளை ஏற்க முடியாத நிலையில், கல்விக் கடன் பெற்று படித்ததோடு, பள்ளி மாணவர்களுக்கு கணிதம் கற்பித்து வருமானமும் ஈட்டியதாக அவர் தெரிவித்தார்.
அந்த நாட்களை நினைவுகூர்ந்த அவர்,
“ஒரு நாள் முழுவதையும் கடக்க ஒன்று அல்லது இரண்டு சமோசாக்களே போதுமானதாக இருந்த நாட்களும் இருந்தன,” என்று பதிவிட்டுள்ளார்.
படிப்பை முடித்த பிறகு, வளாக வேலைவாய்ப்பு மூலம் மாதம் ரூ.20,000 சம்பளத்தில் தகவல் தொழில்நுட்ப ஆதரவு (IT Support) பணியில் சேர்ந்தார். அந்த வாய்ப்புக்காக நன்றியுணர்வு கொண்டிருந்தாலும், அதைவிட பெரிய இலக்குகளை அடைய வேண்டும் என்ற எண்ணம் தன்னிடம் இருந்ததாக அவர் கூறினார்.
குடும்பத்தின் எதிர்காலத்தை மேம்படுத்துவதில் முழுமையாக கவனம் செலுத்துவதாக தனக்குத் தானே உறுதியளித்த அவர், வேலை நேரத்திற்குப் பிறகு செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (ML) தொடர்பான திறன்களை சுயமாக கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.
“நான் சுயமாகவே AI மற்றும் மெஷின் லேர்னிங் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். எந்த வழிகாட்டி திட்டமும் இல்லை. விலையுயர்ந்த பயிற்சி வகுப்புகளும் இல்லை. வழிகாட்டும் ஆசானும் இல்லை. ஆர்வம், இணையம் மற்றும் வேறுபட்ட வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்ற பசி மட்டுமே இருந்தது,” என்று அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது விடாமுயற்சி பின்னர் ஒரு செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் திட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. அதுவே அவரது தொழில் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் செயற்கை நுண்ணறிவு துறையிலிருந்து தயாரிப்பு மேலாண்மை மற்றும் வணிகத் தலைமைப் பொறுப்புகளுக்கு அவர் முன்னேறினார்.
தான் தோல்வியடைந்த அதே ஆண்டில் ஐஐடியில் சேர்ந்த நண்பர்களுக்கு இணையாக பின்னர் சம்பாதிக்கும் நிலையை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது துபாயில் பணியாற்றி வரும் அவர், தனது பயணத்தைப் பற்றி சிந்தித்தபோது,
“அசாதாரணமான வாழ்க்கையை உருவாக்குவதற்கு சிறப்பான தொடக்கம் அவசியமில்லை. அதற்குத் தேவை மனஉறுதியும் விடாமுயற்சியும்தான்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் அவரது விடாமுயற்சியையும், போராட்ட மனப்பான்மையையும் பாராட்டியுள்ளனர்.
ஒரு பயனர்,
“துபாய் பல இந்தியர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. உங்களின் எதிர்காலத்திற்கு வாழ்த்துகள்,” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், “நீங்கள் பெரிய சாதனைகளுக்காகவே பிறந்தவர். அதை முதல் நாளிலேயே உணர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒருவர்,
“ஒவ்வொரு வெற்றிக் கதையின் பின்னாலும் நமக்குத் தெரியாத எண்ணற்ற போராட்டங்கள் இருக்கின்றன. உங்கள் பயணத்தை தொடர்ந்து பகிர்ந்து எங்களை ஊக்கப்படுத்துங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.