ஐதராபாத் ‘ஸ்வாமி அண்ட் சன்ஸ்’ நிறுவனத்தை கையகப்படுத்தும் TVS SCS

04:30 PM Jan 29, 2026 | cyber simman

இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த சப்ளை செயின் சேவை நிறுவனம் டிவிஎஸ் சப்ளை சைன் சொல்யூஷன்ஸ், ஐதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்வாமி அண்ட் சன்ஸ் 3பிஎல்’ (S&S3PL), நிறுவனத்தை கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

டிவிஎஸ் எஸ்சிஎஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் FIT 3PL மூலம், ரூ.88 கோடிக்கு இந்த கையகப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. S&S3PL நிறுவனம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வலுவான இருப்பு மற்றும் நுகர்வோர் துறை வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த தொடர்புகளை கொண்டுள்ளது. இந்நிறுவனம் 2025 நிதியாண்டில் ரூ.207 கோடி வருவாய் பெற்றிருந்தது.

நிறுவனம் நுகர்வோர் துறை லாஜிஸ்டிகஸ் பிரிவில் ஆழமான அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்டுள்ளது. இந்த கையகப்படுத்தல் டிவிஎஸ் எஸ்சிஎஸ் செயல்பாட்டில் வியூக நோக்கில் முக்கிய மைல் கல்லாக அமைகிறது, என இது தொடர்பான செய்திகுறிப்பு தெரிவிக்கிறது.

கே.சுகுமார், சிஇஒ, டிவிஎஸ் எஸ்சிஸ்

இந்த கையகப்படுத்தல் நிறுவனத்தின் தேசிய அளவிலான செயல்பாட்டிற்கு உதவுவதோடு, அதன் விநியோகம் மற்றும் இணைப்பு நிலை சேவையை வலுவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி நுகர்வோர் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய வாடிக்கையாளர் பரப்பை விரிவாக்கவும் உதவும். ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் சேவையை வலுவாக்கும்.

“இந்த கையகப்படுத்தல் எங்கள் பயணத்தில் முக்கிய மைல்கல். இந்தியாவில் எங்கள் அதிக மதிப்பிலான சப்ளை செயின் சேவையை வலுவாக்கும். இந்தியாவின் முன்னணி வேர்ஹவுசிங் 3பிஎல் சேவை நிறுவனங்களில் ஒன்றாக எங்களை உயரத்தும்,” என்று டிவிஎஸ் எஸ்சிஎஸ் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா சி.இ.ஓ. கே.சுகுமார் கூறியுள்ளார்.

"இது எங்களுக்கு உற்சாகம் அளிக்கும் நடவடிக்கை. தெலுங்கானா, மற்றும் ஆந்திராவின் 35 ஆண்டுகளாக இந்த பிரிவில் முன்னணியில் இருக்கிறோம். டிவிஎஸ் எஸ்சிஎஸ் நிறுவனத்துடன் இணைவது பெரிய அளவில் வாடிக்கையாளர்களை சென்றடைய உதவும்,” என்று ஸ்வாமி அண்டு சன்ஸ் புரமோட்டர் அருண் ஸ்வாமி கூறியுள்ளார்.


Edited by Induja Raghunathan