'Zoho ஊழியர்களுக்கு ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ கிடையாது' - ஸ்ரீதர் வேம்பு திட்டவட்டம்!

12:13 PM May 20, 2026 | muthu kumar

ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான Zoho நிறுவனத்தில், ஊழியர்களுக்கான ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ (WFH) முறையை விரிவுபடுத்த எந்தத் திட்டமும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்து இந்தியாவில் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கூட கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ போன்ற நடைமுறைகளை மீண்டும் பரிசீலிக்குமாறு நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

Sridhar Vembu, CEO of Zoho Corporation.

ஆனால், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) பணிகளில் நேருக்கு நேர் இணைந்து பணிபுரிவது மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், Zoho நிறுவனம் WFH-ஐ விரிவுபடுத்த வேண்டாம் என்ற முடிவுக்கு வந்ததாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

அவர் தனது ‘X’ தள பதிவில் கூறியதாவது,

“நிறுவனத்தின் உள்ளேயே பலர் கருத்து தெரிவித்த பிறகு, WFH முறையை விரிவுபடுத்த வேண்டாம் என்று முடிவு செய்தோம். காரணம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் நேருக்கு நேர் அமர்ந்து பிரச்சினைகளை தீர்ப்பதன் உற்பத்தித்திறன் மிகவும் அதிகமாக உள்ளது.

டெவலப்மென்ட் குழுக்களுடன் பணியாற்றிய எனது அனுபவத்தில், ஊழியர்கள் தொலைவிலிருந்து பணிபுரிந்தால் பிரச்சினைகளைத் தீர்க்க அதிக நேரம் ஆகிறது. அணியினர் நேரில் ஒன்றாக இருந்தால் தன்னிச்சையான கலந்தாய்வும், புதிய யோசனைகளும் இயல்பாக உருவாகின்றன.

”அதே நேரத்தில், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் மாற்று முயற்சிகளில் Zoho கவனம் செலுத்தி வருகிறோம். எரிபொருள் சேமிப்பிற்காக மின்சார பேருந்து வசதிகள் மற்றும் எங்கள் உணவகங்களில் மின்சார சமையல் முறைகளை ஆய்வு செய்து வருகிறோம். ஏற்கனவே சூரிய ஆற்றல் துறையில் பெரிய முதலீடுகளை செய்துள்ளோம்,” என்று கூறியுள்ளார் வேம்பு.