வாழ்க்கையில் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் குஜராத்தைச் சேர்ந்த அனிதா காப்டி. 52 வயதில் பட்டயக் கணக்காளர் (CA) பட்டம் பெற்று, தனது 75வது பிறந்தநாளை கொண்டாடிய தந்தைக்கு அதனை பரிசாக அளித்து பலருக்கும் உத்வேகமாக மாறியுள்ளார்.
வணிகவியல் பட்டதாரியான அனிதா, 23 ஆண்டுகளாக கலை மற்றும் கைவினைப் பாட ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியராக முழுநேரப் பணியில் இருந்தபோதும், கணிதம் மற்றும் கணக்கியல் துறைகளில் இருந்த தனது ஆர்வத்தை தொடர்ந்து வளர்த்துக் கொண்டார். இதன் ஒரு பகுதியாக எம்.காம் மற்றும் பி.எட் பட்டங்களையும் பெற்றார்.
48 வயதில் ஓய்வூதிய காலத்தை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், நிறுவனச் செயலாளராக (Company Secretary) பணியாற்றிய தனது தந்தைக்கு சிறப்பு பரிசு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. அதன்படி, தந்தையின் 75வது பிறந்தநாளுக்கு சிஏ பட்டம் பெற்று பரிசளிக்க வேண்டும், என்ற இலக்கை நிர்ணயித்தார்.
52 வயதில் நிறைவேறிய சி.ஏ. கனவு
2012ஆம் ஆண்டு இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) வழங்கும் நேரடி நுழைவு (Direct Entry) திட்டத்தின் மூலம் சிஏ படிப்பில் சேர்ந்தார். எந்த பயிற்சி மையத்தின் உதவியும் இன்றி IPCC தேர்வில் வெற்றி பெற்றார்.
அவரது பயணத்தின் மிகவும் கடினமான கட்டம், குடும்பப் பொறுப்புகளும் தனிப்பட்ட சோகங்களும் ஒரே நேரத்தில் வந்தபோதுதான் ஏற்பட்டது. மகளின் திருமண ஏற்பாடுகள், மகனின் பொதுத் தேர்வு தயாரிப்புகள் மற்றும் குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியில், சிஏ இறுதித் தேர்வுக்கு வெறும் 10 நாட்களுக்கு முன்பு அவரது மாமியார் காலமானார். இந்த சோதனைகளையும் தாண்டி அவர் தனது இலக்கை விடாமல் தொடர்ந்து முயன்றார்.
அனிதா காப்டி, வடோதராவில் உள்ள கே.சி. மேத்தா & கோ நிறுவனத்தில் மேலாண்மை தணிக்கை பிரிவில் உதவி மேலாளராகவும், பின்னர், சிஎன்கே & அசோசியேட்ஸ் எல்எல்பியில் மறைமுக வரிவிதிப்பு பிரிவில் நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது தனது முன்னாள் சக ஊழியரான சிஏ கோமல் கோஸ்வாமியுடன் இணைந்து தனியாக சிஏ தொழிலை தொடங்கியுள்ளார்.
மும்பையில் உள்ள நார்சீ மூஞ்சே வணிக மற்றும் பொருளியல் கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றுள்ள அவர், குஜராத் பல்கலையில் எம்.காம், மும்பையில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் எல்எல்பி மற்றும் கோட்டா பல்கலையில் பி.எட் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
வயது என்பது வெறும் எண் மட்டுமே; உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் எந்த கனவையும் நனவாக்க முடியும் என்பதை அனிதா கப்டியின் சாதனை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.