+

மோடி ஸ்வீடன் பயணம்: இந்தியா–ஸ்வீடன் உறவு ராணுவ-தொழில்நுட்பக் கூட்டாண்மை நிலைக்கு உயர்வு!

ஸ்வீடனின் கோதன்பர்க் நகரில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையில், இந்தியா மற்றும் ஸ்வீடன் நாடுகள் தங்களது இருதரப்பு உறவை “ராணுவத் தொழில்நுட்ப-நிபுணத்துவக் கூட்டாண்மை” (Strategic Partnership) நிலைக்கு உயர்த்த ஒப்புக் கொண்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிரிஸ்டர்சன் ஆ

ஸ்வீடனின் கோதன்பர்க் நகரில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையில், இந்தியா மற்றும் ஸ்வீடன் நாடுகள் தங்களது இருதரப்பு உறவை “ராணுவத் தொழில்நுட்ப-நிபுணத்துவக் கூட்டாண்மை” (Strategic Partnership) நிலைக்கு உயர்த்த ஒப்புக் கொண்டன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிரிஸ்டர்சன் ஆகியோர் நடத்திய கலந்துரையாடலில் வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, பசுமை மாற்றம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல முக்கிய துறைகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

இரு நாள் அரசு பயணமாக ஸ்வீடன் சென்றிருந்த பிரதமர் மோடிக்கு, இந்தியா–ஸ்வீடன் உறவை வலுப்படுத்தியதற்கும் அவரது தொலைநோக்கு தலைமையையும் பாராட்டும் வகையில் ‘ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார், டிகிரி கமாண்டர் கிராண்ட் கிராஸ்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டது.

பின்னர், நடைபெற்ற கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி,

“எல்லா துறைகளிலும் வளர்ந்து வரும் ஒத்துழைப்பை கருத்தில் கொண்டு, எங்கள் உறவை ராணுவ-தொழில்நுட்ப-பசுமைத் தக்கவைப்புக் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்த தீர்மானித்துள்ளோம். இந்த கூட்டாண்மையின் கீழ் பசுமை மாற்றம், பாதுகாப்பு, உருவெடுத்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் மக்கள் உறவுகளில் கவனம் செலுத்தி முன்னேறுவோம்,” என்றார்.

மேலும், “செயற்கை நுண்ணறிவு, சுகாதார தொழில்நுட்பம் மற்றும் பசுமை போக்குவரத்து போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் பெரும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் நடைபெற்ற AI-Impact உச்சி மாநாட்டில் ஸ்வீடன் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தியா–ஸ்வீடன் தொழில்நுட்ப மற்றும் AI வழித்தடத்தை உருவாக்க நாங்கள் இணைந்து செயல்படுவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறையில் இருநாடுகளின் ஒத்துழைப்பு தொடர்ந்து விரிவடைந்து வருவதாக கூறிய மோடி,

“ஸ்வீடன் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளன என்பது, வாங்குபவர்–விற்பனையாளர் உறவை தாண்டி நீண்டகால தொழில்துறை கூட்டாண்மைக்குத் தாங்கள் நகர்ந்து வருகிறோம் என்பதற்கான சான்றாகும்,” என்றார்.

உலகளாவிய பதற்றமான சூழ்நிலையில் இந்தியா மற்றும் ஸ்வீடன் போன்ற ஜனநாயக நாடுகளின் நெருக்கமான ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்றும், பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்தியா எப்போதும் உரையாடல் மற்றும் தூதரக அணுகுமுறையையே வலியுறுத்தி வருவதாகவும் மோடி கூறினார்.

மேலும், “பயங்கரவாதம் என்பது மனிதகுலத்திற்கே மிகப்பெரிய சவாலாகும் என்பதில் இந்தியாவும் ஸ்வீடனும் ஒருமித்த கருத்தில் உள்ளன. கடந்த ஆண்டு பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஸ்வீடன் வழங்கிய ஆதரவுக்கு பிரதமர் கிரிஸ்டர்சனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பயங்கரவாதத்தையும் அதை ஆதரிப்பவர்களையும் எதிர்த்து எங்கள் போராட்டம் தொடரும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா–ஸ்வீடன் உறவு ஜனநாயக மதிப்புகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித மையப்படுத்தப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகியுள்ளது என்று கூறிய மோடி,

“புதுமையை வளர்ச்சிக்கான கருவியாகவும், நிலைத்தன்மையை பகிர்ந்த பொறுப்பாகவும், ஜனநாயகத்தை எங்களின் மிகப்பெரிய பலமாகவும் இரு நாடுகளும் கருதுகின்றன,” என்றார்.

இருநாடுகளின் ஸ்டார்ட்அப் மற்றும் ஆராய்ச்சி சூழல்களை இணைக்கும் நோக்கில் ‘இந்தியா–ஸ்வீடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“Leadership Group for Industry Transition” எனப்படும் உலகளாவிய கூட்டு முயற்சியின் மூன்றாவது கட்டத்தை தொடங்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டதாக கூறிய மோடி,

“இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன், சுற்றுச்சூழல் பொருளாதாரம் மற்றும் நிலைத்த கட்டமைப்பு துறைகளில் மிகப்பெரிய அளவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்வீடனின் தொழில்நுட்பத்தையும் இந்தியாவின் பரவலான திறனையும் இணைத்தால் உலகிற்கே காலநிலை மாற்ற தீர்வுகளை வழங்க முடியும்,” என்றார்.

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வன் டெர் மேயென் இந்தியா சென்றபோது எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பேசிக்கொண்ட மோடி, “இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொழில்கள், முதலீட்டாளர்கள் மற்றும் புதுமையாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். உர்சுலா கூறியதுபோல் இது ‘அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய்’ போன்றது” என்றார்.

இந்தியா–ஸ்வீடன் இருதரப்பு வர்த்தகம் 2025ஆம் ஆண்டில் 7.75 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை ஸ்வீடன் பிரதமர் பாராட்டியதுடன், ஸ்வீடனில் வாழும் இந்திய சமூகத்தின் பங்களிப்பையும் உயர்வாக குறிப்பிட்டார்.

மேலும், ஐ.நா. மற்றும் பல்தரப்பு அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியம் என்பதை இருநாட்டு தலைவர்களும் வலியுறுத்தியதுடன், உலகளாவிய அமைப்புகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்புக் கொண்டனர்.

இந்த சந்திப்பில் ஸ்வீடன் இளவரசி விக்டோரியா கலந்து கொண்டு, ஸ்வீடன் மன்னர் பதினாறாம் கார்ல் குஸ்டாஃப் மற்றும் ராணியின் வாழ்த்துகளை தெரிவித்தார். அதற்கு பதிலளித்த மோடி, மன்னரின் 80-வது பிறந்தநாளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

தனியாக நடைபெற்ற மற்றொரு சந்திப்பில், மார்ஸ்க் நிறுவனத் தலைவர் ராபர்ட் மேர்ஸ்க் உக்லா உடன் மோடி கலந்துரையாடினார். துறைமுக கட்டமைப்பு, கடல்சார் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பசுமை கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

இதற்கு முன், மோடியின் விமானம் ஸ்வீடன் வான்வெளிக்குள் நுழைந்தபோது அந்நாட்டு விமானப்படை போர் விமானங்கள் பாதுகாப்பு அணிவகுப்பாக வழியனுப்பின. விமான நிலையத்தில் பிரதமர் கிரிஸ்டர்சன் நேரில் வந்து மோடியை வரவேற்றது சிறப்பு மரியாதையாக பார்க்கப்பட்டது.

கோதன்பர்க் வந்தடைந்த பிறகு இந்திய வம்சாவளியினரையும் மோடி சந்தித்தார். அப்போது ஸ்வீடன் ஓபரா பாடகி சார்லோட்டா ஹுல்ட் பாடிய ‘வைஷ்ணவ ஜன தோ’ பக்திப் பாடலும், லில்லா அகடெமியன் மாணவர்கள் வழங்கிய பரதநாட்டிய நிகழ்ச்சியும் இடம்பெற்றன. நிகழ்ச்சியில் வங்காள கலாச்சாரமும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டது.

“வங்காள கலாச்சாரம் உலகம் முழுவதும் பிரபலமானது; ஸ்வீடனும் அதற்கு விதிவிலக்கல்ல,” என்று மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
facebook twitter