உலகின் முன்னணி கப்பல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான HD Hyundai, தமிழ்நாட்டில் தனது மிகப்பெரிய கப்பல் கட்டுமான கிளஸ்டரை அமைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கம் கிடைக்கும், என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் உலகத்தர கப்பல் தயாரிப்பு நிலையம்!
கப்பல் கட்டுமானத்துக்கு உகந்த காலநிலை, புவியியல் சூழல் மற்றும் அதிவேகமாக வளர்ந்து வரும் துறைமுக உள்கட்டமைப்புகள் காரணமாக, தூத்துக்குடி இந்த மிகப்பெரிய திட்டத்திற்கான தளமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி. ராஜா மற்றும் HD Korea Shipbuilding & Offshore Engineering நிறுவன தலைமை குழுவினர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. தமிழ்நாட்டின் தெளிவான கொள்கை, விரைவான ஒருங்கிணைப்பு உலக நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய ஈர்த்து வருகிறது.
HD Hyundai நிறுவனம் தமிழ்நாட்டைத் தேர்வு செய்த முக்கிய காரணங்கள்:
- தெளிவான கொள்கை வழிகாட்டுதல்
- விரைவான நிர்வாக ஒருங்கிணைப்பு
- திறமையான தொழிலாளர்கள்
- கடலோர பொருளாதாரத்திற்கு ஏற்ற சூழல்
- அளவிருத்தக்கூடிய (scalable) நீண்டகால தொழில் முனைவு சூழல்
மாநில அரசு முன்கூட்டியே தகுந்த தளங்களை அடையாளம் கண்டு, தேவையான திறமை, உள்கட்டமைப்புகள் மற்றும் ஊக்கங்களை வழங்கியது. இந்த துறையில் வேலைவாய்ப்பு பெருக்கம் (employment multiplier) இந்தியாவில் 6.4 மடங்கு, என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நேரடி வேலை உருவானால், அதனுடன் சேர்ந்து சுமார் ஆறு வேலைகள் (நேரடி, மறைமுக, தூண்டப்பட்ட) உருவாகும். மேலும், இத்துறையில் 60–65% மதிப்பீர்ப்பு துணைத் துறைகளில் உருவாகிறது.
தமிழ்நாடு கடல்சார் வளர்ச்சியை முன்னுரிமையாகக் கொண்டு, கப்பல் கட்டுமான யார்ட்களை முக்கிய முதலீட்டு துறையாகக் கருதுகிறது. இதன் ஒரு பகுதியாக, நீண்டகால கப்பல் கட்டுமானத்திற்குத் தகுந்த இடங்களை அடையாளம் காணும் பணியை அரசு தீவிரமாக செய்து வந்தது.
விரைவில் தமிழ்நாடு கடல்சார் உற்பத்தி கொள்கை (Tamil Nadu Maritime Manufacturing Policy) வெளிவரவுள்ளது. இந்த உறுதியான கொள்கை, நவீன அடிக்கோடுகள் மற்றும் முதலீட்டுக்கு உகந்த சூழல் ஆகியவற்றினால் தான் HD Hyundai நிறுவனம் தமிழ்நாட்டை தனது விருப்பத் தெரிவாக மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் கடல்சார் தொழில் வளர்ச்சிக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றமாகும்.