இந்தியாவின் முன்னணி ஸ்பேஸ்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'அக்னிகுல் காஸ்மாஸ்' (Agnikul Cosmos) $17 மில்லியன் நிதியை தன் புதிய சுற்றில் திரட்டியுள்ளது. குடும்ப அலுவலகங்கள் மற்றும் பல முக்கிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்த சுற்றில் பங்கேற்றுள்ளனர். புதிய நிதி திரட்டலுடன், சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் மதிப்பு $500 மில்லியனைக் கடந்துள்ளது.
முதலீட்டாளர்கள்:
Advenza Global Limited, Atharva Green Ecotech LLP, HDFC Bank, Artha Select Fund, Prathithi Ventures, 100X.VC போன்ற நிறுவன முதலீட்டாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
செலஸ்டா கேபிடல் நிறுவனத்தின் மேலாண்மை கூட்டாளரும், தற்போதைய முதலீட்டாளருமான அருண் குமார் கூறியதாவது,
“அக்னிகுல் காட்டும் முன்னேற்றமும், உலகளாவிய வாய்ப்புகளும் இந்த முதலீடு மூலம் வலுவாக அங்கீகரிக்கப்படுகின்றன. குறைந்த பூமி சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களுக்கான பெரும் தேவை தற்போது உள்ளது; அதை மிகப் படைப்பாற்றலான அணுகுமுறையுடன் நிறைவேற்ற அக்னிகுல் முற்றிலும் தயாராக உள்ளது,” என்றார்.
ஏரோஸ்பேஸ் மற்றும் ராக்கெட் கூறுகளுக்கான உற்பத்தி தன்மைகளை விரிவுபடுத்தவும் ஸ்டேஜ் ரிகவரி (stage recovery) திட்டங்களை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு ஒதுக்கிய 350 ஏக்கர் பரப்பில் உருவாகும் புதிய ஸ்பேஸ் கேம்பஸ் கட்டுமானப் பணிகளுக்காகவும் உற்பத்தி மற்றும் சோதனை வசதிகளை முழுமையாக இந்தியாவில் உருவாக்கவும் இந்த நிதிப்பயன்படுத்தப்பட உள்ளதாக நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அக்னிகுல் CEO மற்றும் இணை நிறுவனர் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறியதாவது,
“ISRO மற்றும் IN-SPACe ஆதரவுடன் எங்களின் கட்டுப்படுத்தப்பட்ட ஏற்றத் தேர்வை வெற்றிகரமாக முடித்துள்ளோம். இதன் மூலம், கீழ்த்தட்டு மீட்பு, மேல் ஸ்டேஜ் நீட்டிப்பு போன்ற புதிய மேம்பாடுகளை மேற்கொள்ள முடிகிறது. இந்த நிதி எங்களுக்கு உலக அளவில் போட்டியிட உதவும்.”
அண்மையில், அக்னிகுல் தனது பெரிய அளவிலான மெட்டல் அட்டிடிவ் உற்பத்தி யூனிட்டை அறிமுகப்படுத்தியது. உலகின் முதல் ஒரே துண்டில் 3D பிரிண்ட் செய்யப்பட்ட ராக்கெட் என்ஜின் உருவாக்கும் ஸ்டார்ட்அப் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு.
இந்தியா, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள அக்னிகுல், மீண்டும் பயன்படுத்தக்கூடிய லாஞ்ச் ஆர்க்கிடெக்சரை வலுப்படுத்தும் பணியிலும் கவனம் செலுத்துகிறது.
இணை நிறுவனர் & COO மொயின் SPM கூறியதாவது,
“எங்களிடம் பன்னிரெண்டு வாடிக்கையாளர்கள் ஏற்கனவே அவர்களது மிஷன்களை பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அதனால் செயல்பாட்டு திறனை அதிகரிப்பது இயல்பான அடுத்த கட்ட இலக்காக இருந்தது. புதிய லாஞ்ச் பேடிற்கு அருகே அமைக்கப்பட உள்ள இந்தியா-உள்நாட்டு உற்பத்தி மையம், இந்த மிஷன்களை நேரத்திற்கு நிறைவேற்ற உதவும்,” என்றார்.