
சர்வதேச ஆன்லைன் கால்டாக்சி சேவையான உபர், அதானி குழுமத்துடன் கூட்டாக இந்தியாவில் தனது முதல் தரவு மையத்தை அமைக்க இருப்பதாக, நிறுவன சி.இ.ஓ. டாரா கோஸ்ரோவ்ஷாஹி கூறியுள்ளார்.
இந்த புதிய மையம் ஆண்டின் பிற்பகுதியில் செயல்படத்துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான சமூக ஊடக மேடை எக்ஸ் மேடையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இன்று காலை அகமதாபாத்தில் @gautam_adani அவர்களை சந்தித்து, அதானி குழுமத்துடனான தற்போதைய உறவை வளர்த்தெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.”

"உபர் நிறுவனத்திற்கான புதுமையாக்க மையமாக இந்தியா வேகமாக உருவாகி வரும் நிலையில், எங்கள் தொழில்நுட்பத்தை சோதித்து, அமல் செய்ய, அதானி குழுமத்துடன் இணைந்து எங்கள் முதல் தரவு மையத்தை நாட்டில் அமைக்க உள்ளோம். ஆண்டு பிற்பகுதியில் தயாராக உள்ள இந்த முதலீடு, உலகிற்காக இந்தியாவில் இருந்து உருவாக்க உதவும்.”
இந்த மையத்தின் முதலீடு அளவு தொடர்பான விவரம் உடனடியாக தெரியவில்லை.
நாட்டில் தரவுகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், உலக தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான முக்கிய முதலீடு இடமாக தரவு மையங்கள் அமைந்துள்ளன. அண்மையில், கூகுள் நிறுவனம் விசாகப்பட்டினத்தில் தனது ஏஐ மையம் அல்லது தரவு மையத்திற்கான அதிகாரப்பூர்வ துவக்க விழாவை நடத்தியது. அடுத்த ஐந்தாண்டுகளில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போல, மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்தியாவில் 2026 முதல் 2029 வரை 17.5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. தரவு மையங்கள் முதலீடும் இதில் அடங்கும். சென்னை, ஐதராபாத் மற்றும் புனேவில் உள்ள தற்போதைய தரவு மையங்களை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
அமேசான் நிறுவனமும் இந்தியாவில் தனது தரவு மையங்களை 7 பில்லியன் டாலரில் விரிவாக்கம் செய்ய உள்ளது. இந்த மூன்று சர்வதேச நிறுவனங்கள் தவிர, மற்ற நிறுவனங்களும் இந்தியாவில் தரவு மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளன.
இந்திய தரவு மைய சந்தை 2025ல், 5.55 பில்லியன் டாலரில் இருந்து, ஆண்டு அடிப்படையில் 10 சதவீத வளர்ச்சியில், 236% விரிவாக்கம் அடைந்து, 2034ல் 13.11 பில்லியன் டாலராக இருக்கும், என Quess Corp அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த துறையில் தற்போது, 50 நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 86,000 – 90,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஐடி, வலைப்பின்னல் பொறியியல், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றன.
யுவர்ஸ்டோரி குழு – பிடிஐ செய்தி உதவியுடன்
Edited by Induja Raghunathan