பெங்களூருவில் வியாழக்கிழமை நடைபெற்ற Microsoft AI Tour நிகழ்வில் மைக்ரோசாப்ட் CEO சத்ய நாதெல்லா, ஏஜென்டிக் செயற்கை நுண்ணறிவின் (AI Agents) வளர்ச்சி இந்தியாவில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கப் போவதாக தெரிவித்தார். Copilot பிளாட்ஃபார்மில் விரைவில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்படும், என்றார்.
பல துறைகளிலும் AI ஏஜென்ட்கள் உருவாகும் வேகம் அதிகரித்து வருகிறது; சுகாதாரம், வங்கி, உற்பத்தி போன்ற பல துறைகளில் இத்தொழில்நுட்பத்தின் ஆழமான பயன்பாடுகள் வெளிப்படுகின்றன, என்று கூறினார் நாதெல்லா.
இந்திய தொழில்நுட்ப சேவை நிறுவனங்களான Cognizant, Infosys, TCS, Wipro ஆகிய நிறுவனங்களுடன் புதிய கூட்டணியை அமைத்துள்ளது மைக்ரோசாப்ட்.
ஒவ்வொரு நிறுவனமும் 50,000க்கும் மேற்பட்ட Copilot உரிமங்களை பயன்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பின் மூலம் நிறுவனங்களில் உற்பத்தித் திறன், செயல்திறன், அணுகல் வசதி மேம்படும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
”இந்த நிறுவனங்கள் AI-ஐ ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்ல, உலகளாவிய அளவில் வேகத்தை தீர்மானிக்கின்றன. தற்போது Copilot அவர்கள் தினசரி பணிச் செயல்பாடுகளில் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது,” என்று மைக்ரோசாப்ட் இந்தியா தலைவர் சந்தோக் கூறினார்.
இந்த நிறுவனங்கள் பணியாளர்களை AI ஏஜென்ட்கள் மற்றும் Copilot தளத்தில் பெருமளவில் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளன.
டெவலப்பர்கள் புதிய மனப்பாங்கை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாக நாதெல்லா கூறினார்.
“பழைய software development life cycle (SDLC) முறை மாறி, AI சார்ந்த புதிய SDLC-க்கு இடம் கொடுக்க வேண்டும்,” என்றார்.
அதே நேரத்தில், இந்தியாவில் உருவாகும் ஏஜென்டிக் AI திட்டங்கள் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும், 2030க்குள் GitHub இல் இந்தியா உலகின் முதல் இடத்தைப் பெறும், என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Copilot-இல் சேர்க்கப்படும் புதிய திறன்கள் ’அடுத்த தலைமுறை metacognition’-ஐ உருவாக்குகின்றன என்றும், இந்த மேம்பாடுகள் இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் உருவாக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்திய மனித மூலதனமே மிகப் பெரிய பலம். இந்தியாவின் ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நிறுவனமும் மேலும் சாதிக்க வலுப்படுத்தப்படுவது முக்கியம். இந்தியாவின் திறமையான மனிதவளம் இந்த முன்னேற்றத்தின் மையமாக உள்ளது,” என்றார் நாதெல்லா.
ஆங்கிலத்தில்: திம்மையா, தமிழில்: முத்துகுமார்